கார் மீது நேருக்கு நேர் மோதிய லாரி; அரசு மருத்துவர் உட்பட மூவர் உடல்நசுங்கி பலி!

 
accident

பவானி அருகே கார் மற்றும் லாரி நேருக்கு நேர் மோதி ஏற்பட்ட விபத்தில் அரசு மருத்துவர் உட்பட 3 பேர் உயிரிழந்துள்ளனர்.

சேலம் மாவட்டம் மேச்சேரி உடையலூர் பகுதியை சேர்ந்த தேவநாதன்(53) என்பவரது மனைவி இந்திராணி(52). இவர் வனவாசி ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருத்துவராக பணியாற்றி வந்திருக்கிறார். இவர்கள் இருவரும் சுப்பிரமணியம் நகரை சேர்ந்த சத்தியசீலன்(24) என்னும் இளைஞரை அழைத்துக் கொண்டு கோவையில் உள்ள மருத்துவமனைக்கு சென்றுள்ளனர்.

dead

இவர்கள் மூவரும் நேற்று இரவு கோவையில் இருந்து காரில் மேட்டூர் திரும்பிக் கொண்டிருந்தபோது காரை தேவநாதன் ஓட்டி வந்துள்ளார். பவானி மேட்டூர் சாலையில் சென்று கொண்டிருந்த போது எதிரே வந்த லாரி நேருக்கு நேர் காரின் மீது மோதியது. இதில் 3 பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். அப்பகுதி மக்கள் உடனடியாக இடிபாடுகளில் சிக்கிய மூவரையும் மீட்க முயன்றனர். ஆனால் காரின் முன் பகுதி லாரியில் சிக்கிக் கொண்டதால் அவர்களை மீட்க முடியாமல் போனது.

இதையடுத்து பவானி தீயணைப்பு துறைக்கு தகவல் கொடுக்கப்பட்டது. விரைந்து வந்த தீயணைப்பு படையினர் மூன்று பேரின் சடலங்களையும் மீட்டனர். இதையடுத்து அவர்களது உடல் பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.