திருட்டு வழக்கில் கைது... மாற்றுத்திறனாளி சிறையில் மரணம்... 3 போலீஸார் சஸ்பெண்ட் - பரபரக்கும் நாமக்கல்!
சேலம் மாவட்டம் கருப்பூர் பகுதியைச் சேர்ந்த மாற்றுத்திறனாளி பிரபாகரன் (45). இவரை திருட்டு வழக்கில் நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம் போலீசார் கடந்த 11ஆம் தேதி கைது செய்தனர். மேலும் அவரை மாவட்ட கிளைச் சிறையிலும் அடைத்தனர். இச்சூழலில் ஜனவரி 12ஆம் தேதி உடல்நலம் பாதிக்கப்பட்டதால் சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்ட அவர் அன்று இரவே உயிரிழந்தார். பிரபாகரன் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக அவரது மனைவி மற்றும் உறவினர்கள் போராட்டம் நடத்தினர்.
மேலும் ஜனவரி 14ஆம் தேதி சேலம் ஆட்சியர் அலுவலகத்தில், ஆட்சியர் கார்மேகம் தலைமையில் அமைதி பேச்சுவார்த்தை நடந்தது. நாமக்கல் மாவட்ட எஸ்பி சரோஜ்குமார் தாக்கூர், சேலம் மாவட்ட எஸ்பி ஸ்ரீஅபிநவ், இறந்தவரின் மனைவி ஆகியோர் இந்தப் பேச்சுவார்த்தையில் பங்கேற்றனர். நிவாரணம், அரசு வேலை, காவல் துறையினர் மீது பணியிடை நீக்க நடவடிக்கை எடுத்தால் மட்டுமே உடலை பெறுவோம் என்ற கோரிக்கைகளை பிரபாகரனின் மனைவி முன்வைத்தார். இது தொடர்பாக பிரபாகரனின் சகோதரர் சக்திவேல் போலீசில் புகார் அளித்தார். இதையடுத்து சந்தேக மரணம் என வழக்கு பதிவு செய்யப்பட்டது.
நேற்று சேலம் 1ஆவது நீதிமன்ற மாஜிஸ்திரேட் கலைவாணி அரசு மருத்துவமனைக்குச் சென்று விசாரணை நடத்தினார். பிரேத பரிசோதனையும் நடந்தது. இதையடுத்து நாமக்கல் மாவட்ட எஸ்பி பரிந்துரைப்படி திருச்செங்கோடு தாலுகா முதல்நிலை காவலர் குழந்தைவேல், புதுச்சத்திரம் எஸ்ஐ பூங்கொடி, சேந்தமங்கலம் எஸ்பி சந்திரன் ஆகியோரை பணியிடை நீக்கம் செய்து மேற்கு சரக ஐஜி பொறுப்பில் உள்ள சேலம் மாநகர காவல் ஆணையர் நஜ்மல் கோடா உத்தரவிட்டார். இதையடுத்து சேலம் அரசு மருத்துவமனை பிணவறையில் வைக்கப்பட்டுள்ள பிரபாகரனின் உடலை பெற்றுக்கொள்ள அவரது உறவினர்கள் சம்மதித்துள்ளனர்.