10ம் வகுப்பு பொதுத்தேர்வு - காப்பி அடிப்பதை தடுக்க 3100 பறக்கும் படைகள் அமைப்பு

 
school

தமிழகத்தில் நாளை பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு நடைபெறவுள்ள நிலையில், தேர்வு மையங்களை கண்காணிக்கவும், சோதனையில் ஈடுபடவும் 3100 பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளன. 

தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத்தேர்வு கடந்த மாதம் 13ம் தேதி தொடங்கி கடந்த திங்கள் கிழமை நிறைவடைந்தது. இதேபோல் தமிழகம் முழுவதும் பிளஸ் 1 தேர்வு நடைபெற்று வரும் நிலையில், இன்று பிளஸ் 1 தேர்வு நிறைவு பெறுகிறது. இந்நிலையில், தமிழகம் முழுவதும் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு நாளை தொடங்குகிறது.  இந்த தேர்வை 9 லட்சத்து 76 ஆயிரத்து 89 மாணவ-மாணவியர் எழுதுகிறார்கள்.  நாளை தொடங்கி வருகிற 20-ந்தேதி வரை நடைபெற இருக்கிறது. இந்த தேர்வை 4 லட்சத்து 66 ஆயிரத்து 765 மாணவர்களும், 4 லட்சத்து 55 ஆயிரத்து 960 மாணவிகளும் என மொத்தம் 9 லட்சத்து 22 ஆயிரத்து 725 பேர் எழுதுகின்றனர். 

இதேபோல் புதுச்சேரியில் இருந்து 7 ஆயிரத்து 911 மாணவர்களும், 7 ஆயிரத்து 655 மாணவிகளும் என மொத்தம் 15 ஆயிரத்து 566 பேரும் பள்ளி மாணவர்களாக எழுத இருக்கின்றனர். இதுதவிர தனித்தேர்வர்களாக 26 ஆயிரத்து 352 மாணவர்கள், 11 ஆயிரத்து 441 மாணவிகள், 5 திருநங்கைகள் என மொத்தம் 37 ஆயிரத்து 798 பேரும் எழுதுகின்றனர். ஆக மொத்தம் இந்த ஆண்டு எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வை 9 லட்சத்து 76 ஆயிரத்து 89 மாணவ-மாணவிகள் ஆர்வத்துடன் எழுத உள்ளனர். மேலும் சிறைக்கைதிகள் 264 பேரும், மாற்றுத்திறனாளிகள் 13 ஆயிரத்து 151 பேரும் எழுதுகின்றனர். இந்த தேர்வுக்காக தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் 4 ஆயிரத்து 25 மையங்களில் 12 ஆயிரத்து 639 பள்ளிகளில் தேர்வு அறைகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.  

இந்த நிலையில், தேர்வு மையங்களை கண்காணிக்கவும், சோதனையில் ஈடுபடவும் 3100 பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளன. காப்பி அடித்தல், துண்டு சீட்டு வைத்து எழுதுதல் போன்ற ஒழுங்கீன செயல்களில் ஈடுபடுவதை தடுக்க பறக்கும் படையினர் தீவிர சோதனையில் ஈடுபட உள்ளனர். தேர்வு அறையில் கண்காணிப்பு பணியில் மட்டும் 46 ஆயிரத்து 870 அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். தேர்வு மையத்திற்குள் மாணவர்கள் சோதனைக்கு பிறகே அனுமதிக்கப்படுவார்கள். தேர்வு மையங்களில் செல்போன், கணினி, கால்குலேட்டர் போன்றவை எடுத்து செல்ல தடை செய்யப்பட்டுள்ளது. அனைத்து தேர்வு மையங்களிலும் போலீஸ் பாதுகாப்பு போடப்படுகிறது.