சென்னையில் நாளை 2000 இடங்களில் 34வது மெகா தடுப்பூசி முகாம்..

 
கொரோனா தடுப்பூசி

சென்னை மாநகராட்சி பகுதிகளில் நாளை  ( ஞாயிற்றுக்கிழமை ) 2000 இடங்களில் 34வது கொரோனா மெகா தடுப்பூசி சிறப்பு முகாம் நடைபெறுகிறது.  

இதுதொடர்பாக  சென்னை மாநகராட்சி நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில், “இந்தியாவிலேயே எந்த மாநிலத்திலும் இல்லாத அளவில் 33 கொரோனா மெகா தடுப்பூசி சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டுள்ளன. சென்னையில் நடந்த 33 மெகா தடுப்பூசி முகாம்களில் இதுவரை 41,26,183 கொரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளது.  நாளை  ( 21ம் தேதி- ஞாயிற்றுக்கிழமை) சென்னை மாநகராட்சி பகுதிகளில் 34வது கொரோனா மெகா தடுப்பூசி சிறப்பு முகாம்கள் நடைபெற உள்ளது.

தடுப்பூசி

இந்த முகாமிற்காக ஒரு வார்டிற்கு 10 முகாம்கள் (1 நிலையான முகாம் மற்றும் 9 நடமாடும் முகாம்கள்) என 200 வார்டுகளில் 2,000 முகாம்கள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இந்த பணிகளுக்காக ஒரு வார்டிற்கு 5 சுகாதார குழுக்கள் வீதம் 200 வார்டுகளுக்கு 1,000 சுகாதார குழுக்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.  சென்னை மாநகராட்சியில் 84,810 கோவிஷீல்டு தடுப்பூசிகள், 2,56,270 கோவாக்சின் தடுப்பூசிகள் மற்றும் 72,900 கார்பெவேக்ஸ் தடுப்பூசிகள் என மொத்தம் 4,13,980 தடுப்பூசிகள் கையிருப்பில் உள்ளன.  பூஸ்டர் டோஸ்  தடுப்பூசியானது செப்டம்பர் 30ம் தேதி வரை 18 வயதிற்கு மேற்பட்ட அனைத்து தரப்பினருக்கும் விலையில்லாமல் தடுப்பூசி செலுத்த தமிழ்நாடு அரசால் அறிவுறுத்தப்பட்டுள்ளது.  

சென்னையில் நாளை  2000 இடங்களில் 34வது மெகா தடுப்பூசி முகாம்..

அதன்படி,  18 வயதிற்கு மேற்பட்டவர்கள் கோவிஷீல்டு மற்றும் கோவாக்சின் தடுப்பூசியை 2 தவணைகள் செலுத்திக் கொண்டு 6 மாதங்கள் அல்லது 26 வாரங்கள் கடந்த நபர்கள் முன்னெச்சரிக்கை தவணை தடுப்பூசி செலுத்த தகுதியுடையவர்கள். இவர்களுக்கு  கார்பெவேக்ஸ் தடுப்பூசி முன்னெச்சரிக்கை தவணை தடுப்பூசியாக செலுத்தப்பட்டு வருகிறது. சென்னையில் இதுவரை 43,05,346 பேர்  தகுதியுடைய நபர்களாக உள்ள நிலையில்,  இவர்களில் 5,08,124 பேருக்கு முன்னெச்சரிக்கை தவணை தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. மேலும் செப்டம்பர் 30ம் தேதி வரை மட்டுமே பூஸ்டர் டோஸ் தடுப்பூசியானது இலவசமாக செலுத்தப்படும். எனவே, இந்த வாய்ப்பை பயன்படுத்தி தகுதியுடைய அனைவரும் முன்னெச்சரிக்கை தவணை தடுப்பூசி செலுத்திக் கொள்ள கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.