4 ஐபிஎஸ் அதிகாரிகள் டிஜிபி-யாக பதவி உயர்வு - தமிழக அரசு உத்தரவு..
தமிழ்நாடு காவல்துறையில் உள்ள ஐ.பி.எஸ். அதிகாரிகள் பேருக்கு , டி.ஜி.பி.யாக பதவி உயர்வு அளித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
காவல்துறையில் ஐபிஎஸ் அதிகாரிகள் ஏ.எஸ்.பியாக பதவியில் இணைந்து எஸ்.பி, டிஐஜி, ஐஜி, ஏடிஜிபி, டிஜிபி என 5 கட்ட பதவி உயர்வை பெறுகிறார்கள். அதில் உயர்ந்த பதவி, இறுதியான பதவி டிஜிபி ஆகும். இந்த நிலையில், தமிழகத்தில் கூடுதல் டிஜிபியாக இருந்த 4 ஐபிஎஸ் அதிகாரிகள், டிஜிபியாக பதவி உயர்வு பெற்றுள்ளனர்.
இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், “அமரேஷ் புஜாரி டிஜிபியாக பதவி உயர்வு செய்யப்பட்டுள்ளார். முன்னதாக சென்னை சைபர் குற்றப்பிரிவு ஏடிஜிபியாக இருந்து வரும் அவர், தற்போது அதே பிரிவில் புதிதாக உருவாக்கப்பட்டுள்ள பதவியில் டிஜிபியாக பதவி உயர்வு பெற்றுள்ளார்.
இதேபோல், புதிதாக உருவாக்கப்பட்ட தாம்பரம் காவல் ஆணையரகத்தின் ஆணையராகவும், ஏடிஜிபியாகவும் உள்ள ரவி, தற்போது டிஜிபியாக பதவி உயர்த்தப்பட்டுள்ளார். மேலும் அவர் தாம்பரம் கமிஷனரேட் ஆணையர் பொறுப்பிலும் நீட்டிப்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
டாக்டர் கே.ஜெயந்த் முரளி., சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஏடிஜிபியாக பொறுப்பு வகித்து வரும் இவர் தற்போது, அதே சென்னை சிலை கடத்தல் தடுப்பு பிரிவில் புதிதாக உருவாக்கப்பட்ட பதவியில் டிஜிபியாக பதவி உயர்வு செய்யப்பட்டுள்ளார்.
கருணாசாகர், ஐபிஎஸ்., - புதுடெல்லி காவல்துறை ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு இயக்குனரகத்தில் ஏடிஜியியாக பணியாற்றி வரும் இவர் தற்போது டிஜிபியாக பதவி உயர்வு பெற்றுள்ளார். ” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.