"சென்னை மாநகராட்சியில் 9969 மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டுள்ளன" - ராதாகிருஷ்ணன் தகவல்
சாலைகளில் ஏற்பட்ட 4162 பள்ளங்கள் மூடப்பட்டுள்ளது என்று ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
சென்னையில் நடைபெற்ற சிறப்பு மருத்துவ முகாமை ஆய்வு செய்த பின்னர் மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், "சென்னையில் மருத்துவ முகாம்கள் மூலம் 5.64 லட்சம் பேர் பயன்பெற்றுள்ளனர்; மழைக்கு பின் தொற்றுநோய் எதுவும் பரவவில்லை; மருத்துவ முகாம்கள் தொடரும் மிக்ஜாம் மழை வெள்ளத்தால் சேதமடைந்த பேருந்து செல்லும் சாலைகளை சீரமைக்கும் பணிகள் 40% நிறைவடைந்துள்ளன. மழைக்குப் பிந்தைய காலத்தில் ஏற்படும் நோய்களை தடுப்பதற்கு இந்த மருத்துவ முகாம் அமைக்கப்பட்டுள்ளது.இதுவரை சென்னை மாநகராட்சியில் 9969 மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டுள்ளன. இதில் 5,00,000-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் பயனடைந்துள்ளனர்;
மழை வெள்ளத்தால் எந்த ஒரு தொற்றுநோயும் தற்போது பரவவில்லை; நோய் தடுப்பு நடவடிக்கைகளில் மாநில அரசு சிறப்பாக ஈடுபட்டு வருவதால், மக்கள் பதற்றம் அடைய வேண்டாம்; காய்ச்சிய குடிநீர் மற்றும் சுத்தமான உணவுகளையே உட்கொள்ள வேண்டும் சாலைகளில் ஏற்பட்ட 4162 பள்ளங்கள் மூடப்பட்டுள்ளது" என்றார்.