சென்னையில் குற்ற செயல்களில் ஈடுபட்ட 424 வெளிமாநிலத்தவர்கள்.. காவல்துறை வெளியிட்ட அதிரடி உத்தரவு..
தமிழகத்தில் கடந்த 2 ஆண்டுகளில் 424 பிறமாநிலத்தவர் குற்ற செயல்களில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் உள்ள வெளிமாநில தொழிலாளர்களின் ஆதார் தகவல்களை சேகரிக்குமாறு காவல்துறை உத்தரவிட்டுள்ளது.
சென்னையில் குற்றச்செயலில் ஈடுபட்ட வெளிமாநிலத்தவர்களின் விவரங்களை காவல்துறை வெளியிட்டிருக்கிறது. அதில் கடந்த 2 ஆண்டுகளில் 424 வெளிமாநிலத்தவர் மற்றும் 96 வெளிநாட்டவர்கள் குற்றச் செயலில் ஈடுபட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது. மேலும், குற்றம் புரிந்த 396 வெளி மாநிலத்தவர்கள் , 82 வெளிநாட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி 19 பேர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளது. அதிலும், சென்னையில் குற்றச்செயலில் ஈடுபட்ட வெளிநாட்டவர்களில் 21 பேர் நேபாளத்தைச் சேர்ந்தவர்கள் என்பதும் தெரியவந்துள்ளது. அவர்களில், 20 பேர் கைது செய்யப்பட்டதாகவும், அனைவரும் மோசடி, கொலை, கொள்ளை உள்ளிட்ட குற்றச்செயல்களில் ஈடுபட்டுள்ளதாகவும் காவல்துறை கூறியுள்ளது.
தமிழகத்தில் உள்ள வெளிமாநில தொழிலாளர்களின் ஆதார் தகவல்களை சேகரிக்க காவல்துறை உத்தரவு பிறப்பித்திருக்கிறது. வெளிமாநிலத்தில் இருந்து வேலைக்காக வந்தவர்கள் பற்றிய தகவல்களை, அந்தந்த நிறுவனங்கள் காவல் நிலையங்களுக்கு தரவேண்டும் என்று தெரிவித்துள்ளது. அதேபோல் வாடகைக்கு வீடு எடுக்கும் பிற மாநிலத்தவர், பிற மாநிலங்களைச் சேர்ந்த மாணவர்கள் குறித்தும் தகவல் தெரிவிக்க வேண்டும் என காவல்துறை தெரிவித்திருக்கிறது.
பிற மாநிலத்தில் இருந்து வேலைக்காக சென்னை வந்தவர்கள் குறித்து, தொழிலாளர் நலத்துறை மற்றும் தனியார் நிறுவனங்கள், கல்வி நிறுவனங்களுடன் இணைந்து டேட்டா பேஸ் தயாரிக்கப்பட இருக்கிறது. அத்துடன் அனுமதிக்கப்பட்ட நாளை தாண்டி இங்கேயே தங்கும் வெளிநாட்டவர், சட்டவிரோதமாக தங்கும் வெளிநாட்டவர்கள் மீது காவல்துறை நடவடிக்கை எடுத்து வருகிறது. ஓட்டல்கள், விடுதிகள், ஹாஸ்டல்களில் தங்கும் வெளிமாநில, வெளிநாட்டு நபர்கள் குறித்து தொடர்ந்து கண்காணிக்கத்து வருவதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.