திமுக துணை பொதுச்செயலாளர்களாக 5 பேர் நியமனம்..
திமுக பொதுக்குழு கூட்டத்தில் துணைப் பொதுச்செயலாளர்களாக 5 பேர் நியமனம் செய்யபட்டுள்ளனர்.
சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள செயின்ட் ஜார்ஜ் பள்ளி விங்க்ஸ் கன்வென்ஷன் செண்டரில் திமுக பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. இதில் திமுக தலைவராக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார். இதேபோல் திமுக பொதுச்செயலாளராக துரைமுருகனும், பொருளாளராக திருச்சி சிவாவும் போட்டியின்று மீண்டும் தேர்வாகியுள்ளனர். இதனையடுத்து திமுக தலைமைக் கழக முதன்மைச் செயலாளராக கே.என்.நேரு நியமிக்கப்பட்டுள்ளார்.
அதேநேரம் தி.மு.க. துணை பொதுச்செயலாளர் பதவியில் இருந்து சுப்புலட்சுமி ஜெகதீசன் விலகியதால், இன்றைய பொதுக்கூட்டத்தில் அந்த இடத்துக்கு புதிய நிர்வாகி நியமிக்கப்படுவார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. கனிமொழிக்கே அதிக வாய்ப்பிருப்பதாகவும் கூறப்பட்டது. இந்த நிலையில் திமுக துணை பொதுச்செயலாளராக 5 பேர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். அதன்படி துணை பொதுச்செயலாளர்களாக கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ. பெரியசாமி, உயர்கல்வித்துறை அமைச்சர் க.பொன்முடி, திமுக எம்.பியும், மகளிரணி தலைவியுமான கனிமொழி, திமுக எம்.பி., ஆ.ராசா, மற்றும் அந்தியூர் செல்வராஜ் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். அப்போது கனிமொழியை "டெல்லி நாடாளுகன்றத்தின் கர்ஜனை மொழி கனிமொழி" என தி.மு.க தலைவர் மு.க. ஸ்டாலின் அழைத்தார்.