கண்டெய்னர் லாரி மீது கார் மோதியதில் 5 பேர் உயிரிழப்பு! திருப்பதி சென்றுவிட்டு திரும்பியபோது நேர்ந்த சோகம்
திருப்பதி அருகே முன்னாள் சென்று கொண்டிருந்த கண்டெய்னர் மீது அதி வேகமாக சென்ற கார் மோதி விபத்துக்குள்ளானதில் ஓசூரை சேர்ந்த ஐந்து பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர்.

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சுவாமி தரிசனம் செய்வதற்காக கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் விகாஸ் நகரை சேர்ந்த தியாகராஜன் மற்றும் அவரது குடும்பத்தினர் நேற்று திருப்பதி வந்தனர். ஏழுமலையான் கோயிலில் சாமி தரிசனம் செய்துவிட்டு மீண்டும் ஓசூருக்கு செல்வதற்காக காரில் இன்று மதியம் புறப்பட்டனர். இவர்கள் கார் திருப்பதி மாவட்டம் பூத்தலப்பட்டு - நாயுடுபேட்டை தேசிய நெடுஞ்சாலையில் சந்திரிகிரி அடுத்த கோனபுரெட்டிபள்ளி அருகே தேசிய நெடுஞ்சாலையில் முன்னாள் சென்று கொண்டிருந்த கண்டெய்னர் லாரியை முந்தி செல்ல முயன்று லாரியின் பின்னால் வேகமாக சென்று மோதி விபத்துக்குள்ளானது.
இதில் கண்டெய்னர் லாரிக்கு அடியில் அப்பளம்போல் கார் நொருங்கியது. இதில் காரில் பயணம் செய்த தியாகராஜன் உள்பட ஐந்து பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் இருவர் பலத்த காயமடைந்தனர். காயமடைந்தவர்களை மீட்டு அருகிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இது குறித்து பாகாலா போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இது குறித்து தகவல் அறிந்த ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, போக்குவரத்து துறை அமைச்சர் ராம் பிரசாத் இறந்தவர்களின் ஆத்மா சாந்தி அடையவும் காயம் அடைந்தவர்களுக்கு தரமான சிகிச்சை அளிக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டனர். இதனை அடுத்து திருப்பதி மாவட்ட கலெக்டர் வெங்கடேஷ்வரலு, எஸ்பி ஹர்ஷவர்தன் ராஜு விபத்து நடந்த இடத்தை பார்வையிட்டு விபத்து நடந்த விதத்தை ஆய்வு செய்தனர்.


