அங்கக வேளாண்மையில் சிறப்பாக செயல்படும் விவசாயிகளுக்கு ரூ.5 லட்சம் பரிசு

 
mrk

அங்கக வேளாண்மையில் சிறப்பாக செயல்படும் விவசாயிகளுக்கு தமிழ்நாடு அரசால் ரூ.5 லட்சம் காசோலையுடன் நம்மாழ்வார் பெயரில் விருது வழங்கப்படும் என வேளாண் பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.  

2023-2024-ம் ஆண்டுக்கான வேளாண் பட்ஜெட் தமிழக சட்டப்பேரவையில் இன்று தாக்கல் செய்யப்பட்டது. திமுக அரசு பொறுப்பேற்றது முதல், வேளாண் துறைக்கு தனி நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்படுகிறது. வேளாண்மைத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் வேளாண் பட்ஜெட்டை தாக்கல் செய்து உரையாற்றி வருகிறார். 

வேளாண்மையில் நம்மாழ்வார் ஆற்றிய பெரும் பங்கை எடுத்துரைக்கும் விதமாக அங்கக வேளாண்மையில் ஈடுபடுபவர்களுக்கு, தமிழ்நாடு அரசால் நம்மாழ்வார் பெயரில் விருது வழங்கப்படும். இவ்விருது ரூ.5 லட்சம் காசோலையுடன், பாராட்டு பத்திரம் குடியரசு தினத்தன்று வழங்கப்படும். 60,000 சிறு குறு மற்றும் நிலமற்ற வேளாண் தொழிலாளர்களுக்கு வேளாண் கருவிகள் தொகுப்பு ₹15 கோடி செலவில் வழங்கப்படும்.  பருவத்திற்கு ஏற்ற பயிர் தொழில்நுட்பம் பற்றிய தகவல்களை உழவர்களுக்கு பகிர்வதற்காக விவசாயிகளை ஒருங்கிணைத்து கிராம வேளாண் முன்னேற்ற குழு அமைக்கப்படும். உழவர் நலன் சார்ந்த தகவல்களை கணினி மயமாக்கி இணையதளம் அறிமுகம். வரும் ஆண்டில் 37 மாவட்டங்களில், 385 வேளாண் வட்டார மையங்களில் பணமில்லா பரிவர்த்தனை அமல்படுத்தப்படும். சூரியகாந்தி, எள், நிலக்கடலை, சோளப் பயிர் சாகுபடியைப் பரவலாக்க ரூ.33 கோடி ஒதுக்கீடு.  நெல்லுக்கு பின்னான பயிர் சாகுபடிக்கு ரூ.24 கோடி மானியம் வழங்கப்படும்.