நின்றுகொண்டிருந்த கண்டெய்னர் லாரி மீது மோதிய கார் - 5 பெண்கள் பரிதாபமாக பலி

 
Accident

நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூரில், தேசிய நெடுஞ்சாலையில் சாலையோரம் நின்று கொண்டிருந்த கண்டெய்னர் லாரி மீது அதிவேகமாக வந்த கார் மோதிய விபத்தில் 5 பெண்கள் உயிரிழந்த நிலையில், 4வயது குழந்தை உட்பட 2 பேர் படுகாயம் அடைந்தனர். 

நாமக்கள் மாவட்டம் திருச்செங்கோடு அருகே மோர்பாளையம் பகுதியை சேர்ந்த 6 பேர் காரில் சென்றுகொண்டிருந்தனர். இந்த காரை சென்னை தாம்பரம் பகுதியை சேர்ந்த ரவி என்பவர் ஓட்டி வந்தார்.  பரமத்திவேலூரில் தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த போது திடீரென கட்டுப்பாட்டை இழந்த அந்த கார் சாலையோரம் நின்று கொண்டிருந்த கண்டெய்னர் லாரி மீது மோதி பயங்கர விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் அந்த கார் அப்பளம் போல் நொறுங்கிய நிலையில், அதில் பயணித்தவர்களுக்கு பலத்த காயம் ஏற்பட்டது. இந்த விபத்தில் 4 பெண்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். 

திருச்செங்கோடு மோர்பாளையம் பகுதியைச் சேர்ந்த மகாலட்சுமி, கந்தாயி, குஞ்சம்மாள், கவிதா ஆகிய நான்கு பெண்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். படுகாயம் அடைந்த சேர்ந்த சாந்தி, ஓட்டுநர் ரவி மற்றும் 4 வயது குழந்தை லஷ்சனா ஆகிய மூன்று பேரும் நாமக்கல் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டனர். ஆனால் அங்கு சிகிச்சைப் பலனின்றி சாந்தி உயிரிழந்தார். ஓட்டுஅர் ரவி மற்றும் குழந்தை லஷ்சனா ஆகிய இருவரும் தீவிர சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.