ஒரே வாரத்தில் 54 லட்சம் இணைப்புகள்.. மின் இணைப்புடன் - ஆதார் இணைக்கும் பணி தீவிரம்..
தமிழகம் முழுவதும் ஒரே வாரத்தில் 54 லட்சம் பேர் மின் இணைப்புடன் ஆதார் எண்களை இணைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் வீடுகள், அடுக்குமாடி குடியிருப்புகள், வணிக கட்டிடங்கள் மற்றும் விசைத்தறி பயன்பாட்டாளர்கள் தங்களது மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என மின்சார வாரியம் அறிவித்தது. அதன்படி மின்சார இணைப்புடன் - ஆதார் எண்ணை இணைக்கும் பணி கடந்த மாதம் இறுதியில் தொடங்கியது. இதற்காக சிறப்பு முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. மின் இணைப்புடன் ஆதாரை இணைக்க இந்த மாதம் 31-ந் தேதி வரை அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து மின் வாரிய அலுவலகங்களுக்கே நேரில் சென்று பொதுமக்கள் ஆதார் எண்ணை இணைக்கும் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இதற்கு ஆதார் எண் நகல், அதில் இணைக்கப்பட்டுள்ள செல்போன் எண் கொண்ட போனை எடுத்துச்செல்ல வேண்டும். மின்சார அலுவலகங்களில் இதற்காக சிறப்பு கவுண்டர்கள் திறக்கப்பட்டு அங்கு நேரடியாகவும், ஆன்லைன் வழியாகவும் இணைக்க வசதிகள் செய்யப்பட்டுள்ளன. அதன் அடிப்படையில் தமிழகம் முழுவதும் நேற்று வரை 54 லட்சத்து 55 ஆயிரம் மின் இணைப்புகள் ஆதாருடன் இணைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நேற்று மட்டும் 2811 சிறப்பு கவுண்டர்கள் மூலம் 83 ஆயிரமும், ஆன்லைன் வழியாக 1.55 லட்சமும் இணைக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. தொடர்ந்து மின் இணைப்புடன் ஆதார் எண் இணைக்கும் பணி நடைபெற்று வரும் நிலையில், ஒரே வாரத்தில் 54 லட்சம் மின் இணைப்புகளுடன் ஆதார் எண் இணைக்கப்பட்டுள்ளது.