ஏ.வி. சாரதி வீட்டில் நடந்த 60 மணி நேர சோதனை - முக்கிய ஆவணங்கள் சிக்கின
திமுக பிரமுகரும் புகழும் பிரபல தொழிலதிபருமான ஏ.வி. சாரதி வீட்டில் கடந்த நான்கு நாட்களாக நடந்து வந்த வருமான வரித் துறையினரின் சோதனை இன்று அதிகாலை நிறைவுபெற்றது.
ராணிப்பேட்டை மாவட்ட அதிமுக வர்த்தகர் அணி செயலாளராக இருந்த ஏ.வி. சாரதி, நடந்து முடிந்த சட்டப் பேரவைத் தேர்தலில் ஏற்காடு தொகுதியில் அவருக்கு, அதிமுக சார்பில் சீட் வழங்காத ஆத்திரத்தில், அக்கட்சியில் இருந்து விலகி, கடந்த ஆகஸ்ட் மாதத்தில் ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தார். அதிமுகவின் முன்னாள் நிர்வாகியும், தற்போதைய திமுக பிரமுகருமான ஏ.வி.சாரதி, பிரபல தொழிலதிபராக உள்ளார். இவரது வீடு ராணிப்பேட்டை மாவட்டத்தில் ஆற்காடு அருகே உள்ளது.
அவரது வீடு மற்றும் அவருக்கு சொந்தமான அலுவலகம் , திமிரி அடுத்த பாடி பகுதியில் உள்ள கல்குவாரி ஆகியவற்றில் வருமானவரித்துறை அதிகாரிகள் கடந்த புதன்கிழமை காலை முதல் சோதனையில் ஈடுபட்டு வந்தனர். சோதனையின்போது பாதுகாப்பு காரணமாக சோதனை நடைபெற்ற இடங்களில் துப்பாக்கி ஏந்திய போலீசார் ஈடுபடுத்தப்பட்டனர்.
சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், பெங்களூரு ஆகிய பகுதிகளில் இருக்கும் ஏ.சி.சாரதிக்கு சொந்தமான இடங்கள், அவருக்கு நெருக்கமானவர்கள், நண்பர்கள் என மொத்தம் 28 இடங்களில் இந்த தொடர் சோதனைகள் நடைபெற்று வந்தன.
சுமார் 60 மணி நேரம் தொடர்ந்து நடைபெற்று வந்த வருமான வரித்துறை சோதனை நான்காவது நாளான இன்று அதிகாலை நிறைவு பெற்றது . சோதனையை முடித்துக் கொண்ட அதிகாரிகள் அங்கிருந்து வெளியேறி விட்டனர். ஆனாலும் அவர்கள் சோதனை குறித்து எந்த ஒரு தகவலையும் வெளியிடவில்லை.
இந்த சோதனையில் முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.