புதிதாக 7.35 இலட்சம் மகளிருக்கு உரிமைத் தொகை!!

 
tj

கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தின் கீழ் புதிதாக 7.35 இலட்சம் மகளிருக்கு உரிமைத் தொகையை  தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கி தொடங்கி வைத்தார்.

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் இன்று (10.11.2023) சென்னை, கலைவாணர் அரங்கத்தில் நடைபெற்ற விழாவில், மகளிருக்கு மாதந்தோறும் ரூ.1000/- வழங்கிடும் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தில், கள ஆய்வு நிலுவையில் இருந்த விண்ணப்பங்கள் இறுதி செய்யப்பட்டு தேர்ந்தெடுக்கப்பட்ட புதிய பயனாளிகளான 7.35 இலட்சம் மகளிருக்கு உரிமைத் தொகை வழங்கிடும் விதமாக 6 மகளிருக்கு வங்கி பற்று அட்டைகளை (ATM Cards) வழங்கினார்.
நிதிநிலை அறிக்கையில் மகளிர் உரிமைத் தொகை திட்டம் பற்றிய அறிவிப்பு

rh

தமிழ்நாடு அரசின் 2023-24ஆம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையில், “மகளிருக்குச் சொத்துரிமையும், உள்ளாட்சி அமைப்புகளில் தனி இடஒதுக்கீடு அளித்தது முதல், தற்போது கட்டணமில்லாப் பேருந்து பயணம் வழங்கியது வரை, மகளிரின் நலன் காத்து அவர்களது உரிமைகளை நிலைநாட்டுவதில் எப்போதும் அக்கறையுடன் இவ்வரசு செயல்பட்டு வருகிறது. அந்த வரிசையில் குடும்பத் தலைவிகளுக்கு மாதம் 1,000 ரூபாய் வழங்கப்படும் என்ற தேர்தல் வாக்குறுதியில் அறிவித்தபடி, தகுதிவாய்ந்த குடும்பங்களின் குடும்பத் தலைவிகளுக்கு வரும் நிதியாண்டில் மாதம் 1,000 ரூபாய் உரிமைத் தொகையாக வழங்கப்படும். வரலாற்றுச் சிறப்புமிக்க இந்தத் திட்டம் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் நூற்றாண்டான இந்த ஆண்டில், திராவிட இயக்க மாதம் என சொல்லத்தக்க செப்டம்பர் மாதத்தில், தாய் தமிழ்நாட்டின் தலைமகன் பேரறிஞர் பெருமகன் அறிஞர் அண்ணா அவர்களின் பிறந்தநாளான செப்டம்பர் மாதம் 15 ஆம் நாள் மாண்புமிகு முதலமைச்சர் அவர்களால் தொடங்கி வைக்கப்படும்” என்று அறிவிக்கப்பட்டது.
-
மகளிர் உரிமைத் தொகை வழங்கும் திட்டம் குறித்து தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் விளக்கம்

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் 27.3.2023 அன்று தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில், இத்திட்டத்தை செயல்படுத்துவது குறித்து அளித்த விளக்கத்தில், “மகளிர் உரிமைத் தொகைத் திட்டம்” இரண்டு நோக்கங்களைக் கொண்டது. பாராமல் வாழ்நாளெல்லாம் ஓயாமல் உழைத்துக்கொண்டிருக்கும் பெண்களின் உழைப்புக்குக் கொடுக்கும் அங்கீகாரம் முதன்மையானது. அடுத்து, ஆண்டுக்கு 12 ஆயிரம் ரூபாய் உரிமைத் தொகை என்பது, பெண்களின் வாழ்வாதாரத்திற்கு உறுதுணையாக இருந்து, வறுமையை ஒழித்து, வாழ்க்கைத் தரத்தை உயர்த்தி, சுயமரியாதையோடு சமூகத்தில் அவர்கள் வாழ்வதற்கு உறுதுணையாக இருக்க மகளிரின் சமூகப் பங்களிப்பை அங்கீகரிக்கும் விதமாக அறிவிக்கப்பட்டிருக்கும் மாதம் ஆயிரம் ரூபாய் என்பது, குடும்பத் தலைவிகளுக்கு அவரவர் வங்கிக் கணக்கில் நேரடியாகச் செலுத்தப்படும். இந்த மகத்தான கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தில் ஏறத்தாழ ஒரு கோடி குடும்பத் தலைவிகளுக்கு, மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கிடும் வகையில் அமைந்திடும் என்றும் அறிவித்தார்.

tn

சமுதாயத்தில் உள்ள விளிம்பு நிலை மக்களாகிய சாலையோரங்களில் குடியிருப்போர், பழங்குடியினர், தூய்மைப் பணியாளர்கள் மற்றும் இதர ஆதரவற்றோர் இந்தத் திட்டத்தில் பயன் அடைவதை மாவட்ட ஆட்சியர்கள் உறுதிசெய்ய வேண்டும் என்றும், அவர்களிடம் குடும்ப அட்டை, ஆதார் அட்டை போன்ற தரவுகள் இல்லையென்றாலும் கூட, அவற்றைப் பெறுவதற்கு உரிய வழிவகை செய்து, கலைஞர் மகளிர் உரிமைத் தொகை அவர்களுக்குக் கிடைப்பதற்கு உதவி புரிய வேண்டும் என்றும், எந்தவொரு தகுதியான பயனாளியும் விடுபட்டுவிடக் கூடாது என்றும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் மாவட்ட ஆட்சித் தலைவர்கள் மற்றும் அரசு உயர் அலுவலர்களை அறிவுறுத்தி இருந்தார்.

தருமபுரியில் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம் விண்ணப்ப பதிவு முகாம் மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் தொடங்கி வைத்தார்

தருமபுரி மாவட்டம், தொப்பூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டப் பயனாளிகளின் விண்ணப்பங்களைப் பதிவு செய்யும் முகாமினை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் 24.7.2023 அன்று தொடங்கி வைத்தார்.
கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தில் இணைந்து கொள்ள 1 கோடியே 63 லட்சம் விண்ணப்பங்கள் அரசிற்கு வந்தது. வந்தது. அவற்றில் தகுதியுள்ள 1 கோடியே 6 லட்சத்து 50 ஆயிரம் விண்ணப்பங்கள் தேர்வு செய்யப்பட்டது.

கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தை தொடங்கி வைத்தல்

money

பேரறிஞர் அண்ணா அவர்கள் பிறந்த நாளான 15.9.2023 அன்று காஞ்சிபுரத்தில் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், 1 கோடியே 6 இலட்சத்து 50 ஆயிரம் மகளிர் பயன்பெறும் வகையில், மாதந்தோறும் ரூ.1000/- வழங்கிடும் தமிழ்நாட்டின் வரலாற்றில் மிகப் பெரிய திட்டமான கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தை தொடங்கி வைத்தார்.

புதிய பயனாளிகளுக்கு கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தின் கீழ் உரிமைத் தொகை வழங்குதல்

கலைஞர் உரிமைத் திட்டத்தின் கீழ் முகாம்களில் விண்ணப்பித்து கள ஆய்வு நிலுவையில் உள்ள விண்ணப்பங்கள் இறுதி செய்யப்பட்டு தேர்ந்தெடுக்கப்பட்ட 7.35 இலட்சம் புதிய பயனாளிகளுக்கு இன்று கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தின் கீழ் மாதந்தோறும் ரூ.1000/- உரிமைத் தொகை பெறும் வகையில் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் 6 மகளிருக்கு வங்கி பற்று அட்டைகளை வழங்கினார். இத்திட்டத்தின் கீழ் தற்போது புதிதாக கண்டறியப்பட்டுள்ள 7.35 இலட்சம் பயனாளிகளுக்கும், ஏற்கனவே, வழங்கப்பட்டு வரும் 1 கோடியே 6 இலட்சத்து 50 ஆயிரம் பயனாளிகளுடன் சேர்த்து திட்டத்தினை விரிவாக்கம் செய்து மொத்தம் 1 கோடியே 13 இலட்சத்து 84 ஆயிரத்து 300 மகளிருக்கு நவம்பர் மாதத்திற்கான உதவித் தொகையினை இன்று வழங்கிட மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் உத்தரவிட்டுள்ளார்.