சென்னையில் இன்று 8 விமான சேவைகள் ரத்து..!
சென்னை விமான நிலையத்திலிருந்து மும்பை, தூத்துக்குடி, ஐதராபாத் உள்ளிட்ட இடங்களுக்கு இயக்கப்பட இருந்த 8 விமானங்கள் இன்று திடீரென ரத்து செய்யப்பட்டுள்ளன.
கடந்த ஜூன் 12ம் தேதி குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் நடைபெற்ற ஏர் இந்தியா விமான விபத்து, ஒட்டுமொத்த விமான போக்குவரத்துத் துறையையுமே அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது. அதன்பிறகு விமானங்கள் கூடுதல் கவனத்துடன் கையாளப்படுகின்றன. சிறிய கோளாறுகள் இருந்தாலும் முழுமையாக சரிசெய்யப்பட்டப் பின்னரே விமானங்கள் இயக்கப்படுகின்றன. இதனால் விமானங்கள் தாமதமாக புறப்படுவது, முழுமையாக ரத்து செய்யப்படுவது போன்ற அசௌகரியங்கள் நடைபெறுகின்றன.

அந்தவையில் இன்று ஒரே நாளில் 8 ஏர் இந்தியா விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. 4 உள்நாட்டு விமான சேவைகளும், 4 வெளிநாட்டு விமான சேவைகளும் ரத்து எனக் கூறப்படுகிறது. அதன்படி, 1. இரவு 7.10 மணிக்கு டெல்லியில் இருந்து சென்னை வரவேண்டிய ஏர் இந்தியா பயணிகள் விமானம், 2. சென்னையில் இருந்து காலை 8 மணிக்கு, மும்பைக்கு செல்லும் ஏர் இந்தியா பயணிகள் விமானம், 3. காலை 9.45 மணிக்கு டெல்லிக்கு செல்லும் ஏர் இந்தியா பயணிகள் விமானம், 4. காலை 10.10 மணிக்கு சென்னையில் இருந்து தூத்துக்குடி செல்லும் ஸ்பைஸ் ஜெட் பயணிகள் விமானம் ஆகியவை ரத்து செய்யப்பட்டுள்ளன.

இதேபோல் 5. தூத்துக்குடியில் இருந்து பகல் 1.45 மணிக்கு சென்னை வரவேண்டிய ஸ்பைஸ்ஜெட் ஏர்லைன்ஸ் விமானம், 6. இரவு 8.40 மணிக்கு சென்னையில் இருந்து டெல்லி செல்ல வேண்டிய ஏர் இந்தியா பயணிகள் விமானம், 7. டெல்லியில் இருந்து காலை 9.05 மணிக்கு சென்னைக்கு வரவேண்டிய ஏர் இந்தியா பயணிகள் விமானம் ரத்து மற்றும் 8. ஐதராபாத்தில் இருந்து அதிகாலை 1.40 மணிக்கு சென்னைக்கு வரவேண்டிய ஸ்பைஸ்ஜெட் ஏர்லைன்ஸ் விமானம் ஆகிய 8 விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. விமானங்கள் ரத்துக்கு இதுவரை முறையாக காரணம் எதுவும் தெரிவிக்கப்படவில்லை என்றும் பயணிகள் குற்றம்சாட்டியுள்ளனர்.


