காங்கிரஸ் மாவட்ட தலைவர்கள் 90% பேர் திமுக கூட்டணியில் இருப்பதை விரும்பவில்லை
டெல்லியில் தமிழ்நாடு உள்ளிட்ட எட்டு மாநிலங்களைச் சேர்ந்த காங்கிரசில் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட மாவட்ட தலைவர்களுடன் பயிற்சி கூட்டம் நடைபெற்றது. மாநிலம் வாரியாக ராகுல் காந்தி மற்றும் மல்லிகார்ஜுன கார்கேவுடன் குழு புகைப்படம் எடுக்க அனுமதிக்கப்படுவார்கள் என சொல்லப்பட்டிருந்த நிலையில் அப்படி புகைப்படம் எதுவும் எடுக்காமல் போனதால் அனைவரும் ஏமாற்றம் அடைந்தனர்.

டெல்லியில் தொடர்ச்சியாக 10 நாட்களுக்கு நடைபெறும் பயிற்சி கூட்டம் விரைவில் நடைபெற இருப்பதாகவும், அப்பொழுது ராகுல் காந்தி நிச்சயமாக அனைவரிடமும் தனித்தனியாக பேசுவார் என சில டெல்லி நிர்வாகிகள் கூறி அவர்களை சமாதானம் செய்து வைத்துள்ளனர். டெல்லியில் நடைபெற்ற புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட காங்கிரஸ் மாவட்ட தலைவர்களின் 90% பேர் திமுக கூட்டணியில் காங்கிரஸ் இருப்பதை விரும்பவில்லை என காங்கிரஸ் மேலிடத் தலைவர்களிடம் கூறியுள்ளனர். மேலும் தற்போதைய சூழலில் விஜயின் தமிழக வெற்றிக் கழகத்துடன் சேரும்பொழுது கணிசமான எண்ணிக்கையில் போட்டியிடலாம், வாக்கு வங்கியையும் அதிகரிக்கலாம் எனவே இதுகுறித்து தலைவர் கார்கே மற்றும் ராகுல் காந்தி ஆகியோரிடம் எடுத்துச் சொல்ல வேண்டும் எனவும் சிலர் கூறியுள்ளனர். இன்றைய டெல்லி காங்கிரஸ் நிகழ்வுகளை வைத்து பார்க்கும் பொழுது காங்கிரஸ் கட்சியின் அனைத்து மட்ட தலைவர்களும் திமுக மீது கடும் கோபத்திலும் அதிருப்தியிலும் இருக்கிறார்கள் என்பது தெளிவாகிறது. வேண்டுமென்றே திமுக தலைமை தங்களை அவமரியாதை செய்கிறது என அத்தனை பேரும் உணர்கிறார்கள்.


