துணிக்கடையின் இரும்பு கேட் விழுந்து 5 வயது சிறுமி பலி.. தந்தையை பார்க்கச் சென்றபோது நேர்ந்த பரிதாபம்..
சென்னை கீழ்ப்பாக்கத்தில் துணிக்கடையில் காவலாளியாக பணியாற்றும் தனது தந்தையைக் காண, தாயுடன் சென்றபோது கடையின் இரும்பு கேட் சரிந்து விழுந்து ஐந்து வயது சிறுமி பரிதாபமாக உயிரிழந்தார்.
கீழ்ப்பாக்கம் பகுதியில் உள்ள துணிக்கடை ஒன்றில் சங்கர் என்பவர் காவலாளியாக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் அவரை காண நேற்று இரவு தாய் வாணியுடன் அவர்களது ஐந்து வயது குழந்தை ஹரிணி ஸ்ரீ , துணிக்கடைக்குச் சென்றுள்ளார். சங்கர் பணி முடிந்து புறப்படும் சமயம் என்பதால், உடமைகளை எடுத்துக்கொண்டு கடைமுன் நிறுத்தியுருந்த இருசக்கர வாகனம் அருகே வந்துள்ளார். அப்போது கடைக்கு வெளியே உள்ள இரும்பு கேட் அருகே, காவலாளியுடம் சிறுமி ஹரிணி பேசிக்கொண்டு நின்றிருந்துள்ளார். அப்போது பணியில் இருந்த காவலாளி கேட்டை மூட முயற்சித்துள்ளார்.
எதிர்பாராத விதமாக சிறுமியின் மீது இரும்பு கேட் சரிந்து விழுந்துள்ளது. இதில் பின்னந்தலையில் பலத்த காயம் அடைந்த சிறுமியை கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை அளித்து வந்தனர். கடையில் பணியாற்றும் காவலாளியின் குழந்தை, கடையின் கேட் சரிந்து விழுந்து உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையிலும் கடை உரிமையாளரும் அல்லது கட்டிட உரிமையாளர் மருத்துவமனைக்கு சென்று குழந்தையை பார்க்கவில்லை என்று கூறப்படுகிறது.
இந்நிலையில், இன்று காலை சிறுமி ஹரிணி ஸ்ரீ சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் தொடர்பாக கீழ்ப்பாக்கம் போலீசார் அஜாக்ரதையாக செயல்பட்ட மரணத்தை விளைவித்தல் ஆகிய இரண்டு பிரிவுகளின் கீழ் வழக்குபதிவு செய்து சம்பவ இடத்திலிருந்து சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர். மேலும் இரும்பு கேட் எவ்வாறு விழுந்தது என நேரில் ஆய்வு மேற்கொண்டனர். இந்த சம்பவம் தொடர்பாக காவலாளி சம்பத் மற்றும் கடையின் மேலாளர் ஸ்ரீனிவாசன் கைது செய்யப்பட்டுள்ளார்.