வாய்க்காலில் சடலமாக மிதந்த 6 வயது சிறுவன் - காவல்துறை தீவிர விசாரணை..
ஈரோடு மாவட்டம் கோபிச்செட்டிபாளையம் அருகே வாய்க்காலில் சடலமாக மிதந்து வந்த 6 வயது சிறுவன் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோபிசெட்டிபாளையம் அடுத்துள்ள உக்கரம் குப்பன்துறை அருகே உள்ள கிழப்பவாணி வாய்க்காலில், 6 வயது சிறுவன் ஒருவன் மிதந்து கொண்டிருந்தான். இதனைப்பார்த்த அவ்வழியேச் சென்ற பொதுமக்கள் சில கடத்தூர் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். பின்னர் உடனடியாக இது குறித்து சத்தியமங்கலம் தீயணைப்பு துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டது. தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் வாய்க்காலில் மிதந்து வந்த சிறுவனை மீட்டனர். நிகழ்விடத்திலிருந்த கடத்தூர் காவல் ஆய்வாளர் துரைப்பாண்டியன் முதலுதவி செய்தால் சிறுவன் பிழைக்க வாய்ப்புள்ளதாக கருதி, அந்த சிறுவனுக்கு முதலுதவி சிகிச்சை அளித்துள்ளார்.
ஆனால் முதலுதவி சிகிச்சை எதுவும் பலனளிக்காத நிலையில், சிறுவன் நீரில் மூழ்கி ஏற்கனவே இறந்து விட்டிருக்கலாம் என்று காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து வாய்க்காலில் மிதந்து வந்த அந்த சிறுவன் குறித்து கேட்டபோது, அப்பகுதி மக்கள் யாருக்கும் தெரிந்திருக்கவில்லை. இந்நிலையில் அந்தச் சிறுவன் யார் என்பது குறித்தும், எப்படி வாய்க்காலுக்கு வந்தார் என்பது குறித்தும் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தொடர்ந்து மீட்கப்பட்ட சிறுவனின் உடல் பிரேத பரிசோதனைக்காக பெருந்துறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.