இரட்டை இலை சின்னத்தை முடக்கக்கோரிய வழக்கு - ரூ. 25,000 அபராதத்துடன் தள்ளுபடி செய்த ஹைகோர்ட்..
உட்கட்சி மோதலில் ஈடுபட்டுள்ள அதிமுகவின் இரட்டை இலை சின்னத்தை முடக்கக்கோரிய வழக்கு, ரூ. 25000 அபராதத்துடன் சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரம் தீவிரமடைந்துள்ள நிலையில் வருகிறது 11ஆம் தேதி சென்னை மாநகரத்தில் உள்ள தனியார் மண்டபத்தில் அக்கட்சியின் பொதுக்குழு கூட்டம் நடைபெற உள்ளது. அதற்கான ஏற்பாடுகள் ஒரு புறம் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில் பொதுக்குழுவுக்கு தடை எடுக்க வேண்டும் என ஓபிஎஸ் தரப்பு சென்னை உயர்நீதிமன்றம் உச்சநீதிமன்றம் மற்றும் தேர்தல் ஆணையத்தில் தனித்தனியே மனுதாக்கல் செய்திருக்கிறது.
அந்த வகையில் முன்னாள் உறுப்பினரும் ஜே . ஜே கட்சியின் நிறுவனருமான பி.ஏ.ஜோசப் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்தார். அதில் அதிமுக பொதுச் செயலாளர் பதவியை கைப்பற்றுவதற்கு முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி 5,000 கோடி ரூபாய் செலவு செய்துள்ளதாக, வாரம் இருமுறை வெளியாகும் பத்திரிகையில் செய்தி வெளியானதாக குறிப்பிட்டுள்ளார்.
ஜூலை 11ம் தேதி பொதுக்குழு கூட்டத்தில் மாவட்ட செயலாளர்களின் ஆதரவை திருட்டுவதற்காக மேலும் 1000 கோடி ரூபாய் செலவு செய்துள்ளார் என்றும் , கட்சியின் முன்னாள் முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் இடையிலான பிரச்சனை சாதி ரீதியான பிரச்சனையாக உருவெடுத்து இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். இது மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலை வை ஏற்படுத்தியிருக்கிறது என்றும், ஆகையால் அதிமுகவின் இரட்டை இலை சின்னத்தை முடக்கி வைத்து, கட்சிக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஜூன் 28ஆம் தேதி தேர்தல் ஆணையத்திற்கு மனு அனுப்பியதாகவும் தெரிவித்துள்ளார்.
ஆனால் தனது மனுவிற்க்கு எந்த பதிலும் அளிக்கப்படவில்லை என்றும், தனது மனுவை பரிசீலித்து அதிமுகவுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க ஆணையத்திற்கு உத்தரவிட வேண்டும் என்றும் அந்த மனுவில் கேட்டுக் கொண்டுள்ளார். இந்த வழக்கு தலைமை நீதிபதி முனிஸ்வரநாத் பண்டாரின் தலைமையிலான முதல் அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது விளம்பரத்துக்காக வழக்கு தொடரப்பட்டுள்ளதாக மனுதாரரை கண்டித்த நீதிபதிகள், வழக்கு தொடர்ந்தவருக்கு ரூ. 25,000 அபராதம் விதித்தனர். மேலும் வழக்கை தள்ளுபடி செய்தும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.,