செல்போன் சார்ஜர் வெடித்து தீ விபத்து - இளைஞர் பலி!!
செல்போன் சார்ஜர் வெடித்து இளைஞர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் கோபிசெட்டிபாளையத்தில் அரங்கேறியுள்ளது.
கோபிசெட்டிபாளைம் அருகே கூலை மூப்பனூரை சேர்ந்தவர் அர்ஜூன். பி.ஏ. பொருளாதாரம் பட்டதாரியான இவர் கூலி வேலை செய்து வருகிறார். இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் குழந்தைகள் உள்ளனர். இவரது இரண்டாவது மகன் விவின் பாட்டி வீட்டில் இருந்துள்ளார். சிமெண்ட் சீட்டால் ஆன வீட்டில் மனைவி கஸ்தூரியும், மூத்த மகன் யஸ்வந்த்தும் தூங்கி கொண்டிருந்துள்ளனர். அதன் அருகே இரும்பு தகடால் மேற்கூரை அமைக்கப்பட்டு தென்னை ஓலையால் மறைப்பு ஏற்படுத்தப்பட்ட மற்றொரு வீட்டில் அர்ஜூன் தூங்க சென்றுள்ளார்.
இந்நிலையில் நள்ளிரவில் திடீரென அர்ஜுன் தூங்கி கொண்டிருந்த வீட்டில் திடீர் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதனால் கூரை தீப்பற்றி மளமளவென எரிந்துள்ளது. தீப்பற்றியதால் அர்ஜூன் அலறி கத்தியுள்ளார். அவரது அலறல் சத்தம் கேட்டு மனைவி, அக்கம் பக்கத்தினர் வந்துள்ளனர். இருப்பினும் தீ கொழுந்து விட்டு எரிந்ததால் குடிசை வீட்டை விட்டு வெளியேற முடியாத நிலையில் அர்ஜூன் உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தார். இதுக்குறித்து சிறுவலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியதில் செல்போன் சார்ஜர் வெடித்து தீ விபத்து ஏற்பட்டது தெரிய வந்துள்ளது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.