2 மகள்களுடன் தற்கொலை செய்துகொண்ட தம்பதி.. காரணம் இதுதான்.. கடிதத்தில் உருக்கம்..
தனியார் நிறுவன ஊழியர் மனைவி மற்றும் இரண்டு மகள்களுடன் பாலாற்றில் குதித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சேலம் மாவட்டம் தாதகாப்பட்டி மேற்குதெரு பகுதியைச் சேர்ந்தவர்கள் யுவராஜ் (41) - வான்விழி (31) தம்பதி. இவர்களுக்கு நித்திக்ஷா (7) மற்றும் அப்சரா (3) என்கிற 2 மகள்கள் உள்ளனர். யுவராஜ், டெலிமா எலக்ட்ரானிக்ஸ் இந்தியா பிரைவேட் லிமிடெட் என்ற நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் நேற்று காலை குடும்பத்தோடு வெளியே சென்ற யுவராஜ், கத்திரிபட்டி அருகே தமிழக- கர்நாடக எல்லையான பாலாற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார். முதலில் பிள்ளைகளை ஆற்றில் இறக்கிவிட்டுவிட்டு, தொடர்ந்து கணவன் மனைவி இருவரும் ஆற்றில் இறங்கி தற்கொலை செய்துகொண்டுள்ளனர்.
தற்கொலைக்கு முன்பாக யுவராஜ் எழுதிய கடிதம் ஒன்றையும் எழுதி வைத்துள்ளார். அதில் தனது மூத்த மகளுக்கு நோய் தொற்று இருந்ததாகவும், அதே நோய் தொற்று சிறிய மகளான அப்சராவிற்கும் வந்து விட்டதாகவும் குறிப்பிட்டுள்ளார். எனவே இரண்டு குழந்தைகளையும் எதிர்காலத்தில் காப்பாற்ற முடியும் என்ற நம்பிக்கை இல்லை என்பதால் குடும்பத்தோடு தற்கொலை செய்து கொள்வதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலையில் இவர்கள் தற்கொலை செய்து கொண்ட பாலாறு தமிழக- கர்நாடக எல்லையில் உள்ளது. மேலும் அந்த இடம் தர்மபுரி, சேலம், ஈரோடு ஆகிய மூன்று மாவட்டங்களை இணைக்கும் எல்லை பகுதியாகும். பின்னர் அவர்களது உடல்கள் இருந்த இடம் ஈரோடு மாவட்டம் பர்கூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்டது என்பது தெரியவந்தது. இதனையடுத்து பர்கூர் போலீஸார் நான்கு பேரின் உடல்களையும் கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக அந்தியூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.