நீட் விலக்கு - நாளை கூடுகிறது சட்டப்பேரவை சிறப்புக் கூட்டம்!!
நீட் தேர்விலிருந்து விலக்கு தொடர்பான சட்டமுன்வடிவினை மீண்டும் நிறைவேற்றி, குடியரசுத் தலைவரின் ஒப்புதலைப் பெற, தமிழக ஆளுநர் மூலம் மத்திய அரசுக்கு அனுப்பி வைப்பதற்காக நாளை சட்டப்பேரவை சிறப்பு கூட்டம் கூடுகிறது.
நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்க வேண்டும் என்றும் பள்ளி கல்வியில் மாணவர்கள் பெறும் 12 ஆம் வகுப்பு மதிப்பெண்கள் அடிப்படையிலேயே, தமிழ்நாட்டில் மாணவர் சேர்க்கையை முறை மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும், தமிழ்நாட்டு மக்களிடையே நிலவிவரும் அசைக்க முடியாத கருத்து ஒற்றுமையை மனதில் கொண்டு , மாநில அரசுகளின் உரிமைகளை நிலைநாட்டும் விதமா, நீட் தேர்வில் இருந்து தமிழ்நாட்டில் மருத்துவ மாணவர் சேர்க்கைக்கு விலக்கு அளிக்கும்படி கடந்த செப்டம்பர் 13-ஆம் தேதி சட்டமன்றத்தில் சட்ட முன்வடிவு நிறைவேற்றப்பட்டு, குடியரசுத் தலைவரின் ஒப்புதலைப் பெறுவதற்காக ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்பட்டது. ஆனால் தமிழக ஆளுநர் அதை மத்திய அரசுக்கு அனுப்பி வைக்காமல் 5 மாத காலம் வைத்திருந்து, சட்ட முன்வடிவை தமிழ்நாடு சட்டமன்றம் மறுபரிசீலனை செய்ய வேண்டும் என தெரிவித்து கடந்த 1ஆம் தேதி திருப்பி அனுப்பியுள்ளார்.
நீட் தேர்வில் இருந்து விலக்கு கோரும் இந்த சட்ட முன்வடிவு ஏழை, நடுத்தர மக்களின் நலனுக்கு எதிரானது என்றும், இச்சட்டத்திற்கு அடிப்படையான நீதியரசர் ஏ.கே. ராஜன் குழு தெரிவித்துள்ள கூற்றுகள் தவறானது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். இதன் காரணமாக நீட் விலக்கு விவகாரத்தில் அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து விவாதித்து முடிவெடுக்க கடந்த ஐந்தாம் தேதி சட்டமன்ற அனைத்து கட்சி தலைவர்களுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார்.
இதன் முடிவில், மருத்துவ மாணவர் சேர்க்கையில் ஏழை நடுத்தர மக்களின் நலனைப் பாதுகாக்கவும், மாநில அரசுகளின் உரிமைகளை மீட்டெடுக்கவும், நீட் தேர்வில் இருந்து விலக்கு பெறுவது தீர்வாக அமையும் என்ற அடிப்படையில் ,சட்டமன்றத்தின் சிறப்பு கூட்டத்தைக் கூட்டி, நீட் தேர்வு குறித்து தமிழக ஆளுநர் தெரிவித்துள்ள கருத்துக்கள் குறித்து விரிவாக விவாதித்து, சரியான வாதங்களை எடுத்து வைத்து, இந்த சட்ட முன்வடிவை மீண்டும் நிறைவேற்றி குடியரசுத் தலைவரின் ஒப்புதலைப் பெற மத்திய அரசுக்கு அனுப்பி வைப்பதற்காக, தமிழக ஆளுநருக்கு மீண்டும் அனுப்புவது என சட்டமன்ற அனைத்து கட்சி கூட்டம் தலைவர்களுடனான ஆலோசனை கூட்டத்தில் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இந்நிலையில் சென்னை தலைமை செயலகத்தில் நீட் விலக்கு விவகாரம் தொடர்பாக சட்டப்பேரவை சிறப்புக் கூட்டம் நாளை கூடுகிறது. இதில் நீட் தேர்விலிருந்து விலக்கு தொடர்பான சட்டமுன்வடிவு மீண்டும் நிறைவேற்றப்படுகிறது. பின்னர் குடியரசுத் தலைவரின் ஒப்புதலைப் பெற, தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. இதனிடையே ஆளுநர் ஆர்.என்.ரவி நீட் தேர்வு தொடர்பாக குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடியை சந்தித்து ஆலோசிக்க இருப்பதாகவும் கூறப்பட்ட நிலையில், ஆளுநரின் 3 நாள் டெல்லி பயணம் கடைசி நேரத்தில் ரத்து செய்யப்பட்டுள்ளது கவனிக்கத்தக்கது.