இந்தி விவகாரத்தில் தி.மு.க.வின் இரட்டைவேடத்தை ஒத்துக்கொண்ட அமைச்சருக்கு நன்றி - ஓ.பி.எஸ்.

 
OPS

இந்தி மொழி விஷயத்தில் தி.மு.க.வின் இரட்டை வேடத்தை மறைமுகமாக ஒத்துக் கொண்ட அமைச்சர் தங்கம் தென்னரசுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்வதாக அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். 
  
ஓ.பன்னீர்செல்வம் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது: இந்தி மொழி விஷயத்தில் தி.மு.க. இரட்டை வேடம் போடுகிறது. தன்னலம் என்றவுடன் தடம் மாறுகிறார் முதலமைச்சர் என்பதைச் சுட்டிக்காட்டி அறிக்கை வெளியிட்டதற்கு அமைச்சர் தங்கம் தென்னரசு பதில் அளித்து இருக்கிறார். அவருடைய பதில் அறிக்கையை பார்க்கும்போது, இரட்டை வேடத்திற்கு விடை இல்லை என்பது தெள்ளத் தெளிவாகிறது. 16.09.2020 அன்று தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் மூலிகைகள் சம்பந்தமான ஒரு புத்தகம் சுகாதாரத் துறையின் மூலமாக வைக்கப்பட்டபோது, அதிலே மூலிகைகளின் பெயர்கள் இந்தியில் போடப்பட்டிருந்ததைச் சுட்டிக்காட்டி, அது மும்மொழிக் கொள்கையை ஆதரிப்பது போல இருக்கிறது என்று கூறியவர் அப்போதைய எதிர்க்கட்சித் தலைவர் அவர்கள். ஆனால், இன்று ஆட்சிக்கு வந்த பிறகு தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை விதி 110-ன்கீழ் வெளியிடப்படும் அறிவிப்புகளை இந்தியில் மொழி பெயர்த்து அதை தமிழ்நாடு அரசின் இணையதளத்திலேயே வெளியிடுகிறது தி.மு.க. அரசு. அன்று ஒரு நிலைப்பாடு, இன்று ஒரு நிலைப்பாடு. ஆட்சிக்கு முன் உள்ள நிலைப்பாட்டினை  அமைச்சர் மறந்துவிட்டார் போலும்!
 

ops

இந்தி மொழி குறித்த மாண்புமிகு உள் துறை அமைச்சர் அமித்ஷாவின் கருத்து குறித்து 'ஒன்றுமே தெரியாது' என்று  எடப்பாடி பழனிசாமி தெரிவித்ததாகவும், அதனை நான் கண்டித்து இருக்க வேண்டும் என்றும் அமைச்சர் தங்கம் தென்னரசு கூறி இருக்கிறார். மத்திய உள் துறை அமைச்சர் அமித்ஷா இந்தி மொழி குறித்து தெரிவித்த கருத்து முதலில் அவருக்கு தெரியாததால் 'ஒன்றுமே தெரியாது' என்று கூறினார். பின்னர், அதற்கு மறுநாளே அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஒருங்கிணைப்பாளர் என்ற முறையில் நான் அறிக்கை வெளியிட்டு விட்டதால் அவர் ஒன்றும் சொல்லவில்லை. காரணம், பேரறிஞர் அண்ணாவின் இருமொழிக் கொள்கை தான் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் நிலைப்பாடு. தேசியக் கல்விக் கொள்கை அறிமுகப்படுத்தப்பட்ட போதே அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் நிலைப்பாடு தெளிவாக்கப்பட்டுவிட்டது.
 
ஆனால் முதலமைச்சர் விதி. 110-ன்கீழ் தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் படிக்கப்பட்ட அறிவிப்புகள . இந்தியில் மொழி பெயர்த்து அதனை தமிழ்நாடு அரசின் இணையதளத்தில் வெளியிடுவதன் மூலம் தமிழ் மொழி கற்கும் ஆர்வம் பிற மொழிகளைப் பேசும் மக்களுக்கு ஏற்படாது. இது தன்னலத்திற்கானது. ஏது எப்படியோ, ‘நுணலும் தன் வாயால் கெடும்' என்ற பழமொழிக்கேற்ப, இந்தி மொழி விஷயத்தில் தி.மு.க.வின் இரட்டை வேடத்தை மறைமுகமாக ஒத்துக் கொண்ட அமைச்சர் தங்கம் தென்னரசிற்கு நன்றி. இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.