'ஈபிஎஸ் தலைமை ஏற்க ஆதரவு' - ஓபிஎஸ் தனது ஆதரவாளர்களுடன் ஆலோசனை!!
அதிமுக பொதுக்குழு மற்றும் செயற்குழு கூட்டம் வருகிற 23-ஆம் தேதி நடைபெறுகிறது. இதனால் நேற்று அதிமுக தலைமை அலுவலகத்தில் ஓபிஎஸ் - ஈபிஎஸ் தலைமையில் பொதுக்குழு கூட்டம் குறித்து விவாதிப்பதற்கு நிர்வாகிகளின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் ஒற்றை தலைமை வேண்டும் என்று அக்கட்சி நிர்வாகிகள் கோரிக்கை விடுத்ததாக தெரிகிறது. குறிப்பாக தற்போதுள்ள சூழலில் ஈபிஎஸ்-க்கு கட்சியில் பலம் அதிகம் உள்ளதாக தெரிகிறது.
இதையடுத்து ராமநாதபுரத்தில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வத்தை தலைமை ஏற்க கோரி போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளது . அத்துடன் சென்னை, அதிமுக தலைமை அலுவலகம் அருகே அதிமுக ஒருங்கிணைபாளர் பன்னீர்செல்வத்துக்கு ஆதரவாக போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன. அதிமுகவில் ஒற்றை தலைமை எதிரொலி 'ஓபிஎஸ் தலைமையே' என்ற வாசகத்துடன் பல இடங்களில் போஸ்டர்கள் இடம்பெற்றுள்ளன. அதிமுகவில் ஒற்றை தலைமை குறித்து விவாதங்கள் எழுந்த நிலையில் போஸ்டரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் அதிமுகவுக்கு ஒற்றைத் தலைமை கோரிக்கை வலுத்து வரும் நிலையில், ஓபிஎஸ் தனது ஆதரவாளர்களுடன் 2வது நாளாக ஆலோசனை நடத்தி வருகிறார்.நேற்றைய தினம் நடைபெற்ற அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் பெரும்பாலானோர் எடப்பாடி பழனிசாமி தலைமை ஏற்க ஆதரவு தெரிவித்த நிலையில், கட்சியில் ஓ.பி.எஸ் ஓரங்கட்டப்படலாம் என அவரது ஆதரவாளர்கள் கலக்கம் அடைந்துள்ளனர்.இந்த சூழலில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் இல்லத்திற்கு துணை ஒருங்கிணைப்பாளர்களில் ஒருவரான எம்.எல்.ஏ.க்கள் வைத்திலிங்கம், மனோஜ் பாண்டியன், அதிமுக மாவட்ட செயலாளர் அசோக் உள்ளிட்டோர் வருகை புரிந்துள்ளனர்.ஈபிஎஸ் இல்லத்தில் முன்னாள் அமைச்சர்கள் தளவாய் சுந்தரம், எம்.ஆர்.விஜயபாஸ்கர் உள்ளிட்டோர் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.