அதிமுக பொதுக்குழு வழக்கு - உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணை!!

 
tn

அதிமுக பொதுக்குழு வழக்கு இன்று உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது.

ep
கடந்த ஜூலை மாதம் 11ஆம் தேதி அதிமுக பொதுக்குழு கூட்டம் சென்னை வானகரத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.  இதில் எடப்பாடி பழனிசாமி இடைக்கால பொதுச் செயலாளராக தேர்வு செய்யப்பட்டார்.  அத்துடன் ஓபிஎஸ் உள்ளிட்ட சில நிர்வாகிகள் கட்சியிலிருந்து அதிரடியாக நீக்கப்பட்டனர்.  எடப்பாடி பழனிசாமி அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டதை எதிர்த்து ஓபிஎஸ் மற்றும் அதிமுக நிர்வாகி வைரமுத்து ஆகியோர் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இது தொடர்பாக எடப்பாடி பழனிசாமி தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட இடையீட்டு  மனுவில்,  அதிமுக பொது குழு தொடர்பாக தாக்கல் செய்யப்பட்டுள்ள ஆவணங்கள் மீது தேர்தல் ஆணையம் எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல் இருப்பதால் கட்சிப் பணிகள் தொய்வடைந்துள்ளது என்றும்,  தலைமை தேர்தல் ஆணையத்திற்கு உரிய உத்தரவை பிறப்பிக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

ops

 அதே சமயம் ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட விளக்க மனுவில்  அதிமுகவில் ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் குறித்து இன்னும் எந்த ஒரு முடிவும் எடுக்கப்படாத நிலையில் தேர்தல் ஆணையத்தை இந்த வழக்கில் மனுதாரராக சேர்க்க முடியாது என்றும் எடப்பாடி பழனிசாமியின் கோரிக்கையை நிராகரிக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளது. இந்த சூழலில் எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரின் மனுக்கள் இன்று உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது. விசாரணையின் முடிவில் இடைக்கால உத்தரவு பிறப்பிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.