அதிமுக பொதுக்குழு கூட்டத்திற்கு பாதுகாப்பு அளிக்க உத்தரவிடக் கோரி உயர்நீதிமன்றத்தில் வழக்கு..
சென்னையில் வருகிற 23-ஆம் தேதி நடைபெற உள்ள அதிமுக பொதுக்குழு கூட்டத்திற்கு பாதுகாப்பு வழங்க கோரி அதிமுக சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
சென்னை அருகே வானகரத்தில் உள்ள ஸ்ரீவாரி மண்டபத்தில் வருகிற 23-ஆம் தேதி அதிமுக பொதுக்குழு மற்றும் செயற்குழு கூட்டம் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி, முன்னாள் அமைச்சர்கள், அதிமுக எம்.பிக்கள், எம்.எல்.ஏக்கள் ஆகியோர் பங்கேற்கவுள்ளனர். அத்துடன் பொதுக்குழு மற்றும் செயற்குழு உறுப்பினர்களாக உள்ள சுமார் 2,500 பேரும் கலந்து கொள்வார்கள் என கூறப்படுகிறது. ஆகையால் இந்த கூட்டத்திற்கு பாதுகாப்பு வழங்கக்கோரி திருவள்ளூர் மத்திய மாவட்ட திமுக செயலாளரும், முன்னாள் அமைச்சருமான பெஞ்சமின் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருக்கிறார்.
பொதுக்குழு கூட்டம் குறித்து விவாதிக்க கடந்த 14ஆம் தேதி மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் ஒன்றை தலைமை வேண்டும் என சிலர் கருத்து கூறியதால், அதிமுகவில் கடந்த 1 வாரத்திற்கும் மேலாக சர்ச்சை கிளம்பியிருக்கிறது. அரசியல் வட்டாரத்தில் ஒற்றை தலைமை விவகாரம் சலசலப்பை ஏற்படுத்தி வருகிறது. எடப்பாடி பழனிசாமியியும், ஓ பன்னீர்செல்வம் தனித்தனியே தங்களது ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்தி பலத்தை காட்ட தயாராகி வருகின்றனர். அத்துடன் அதிமுக தலைமை அலுவலகம் முன்பாக இருதரப்பு ஆதரவு தொண்டர்களிடையே கைகலப்பும் ஏற்பட்டது. இதில் பெரம்பலூர் மாவட்ட அதிமுக நிர்வாகிக்கு ரத்த காயம் கூட ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.
ஏற்கனவே பொதுக்குழு மற்றும் செயற்குழு கூட்டத்திற்கு பாதுகாப்பு வழங்கக் கோரி, அதிமுக சார்பில் கடந்த 7ஆம் தேதி தமிழக டிஜிபி மற்றும் ஆவடி மாநகர காவல் ஆணையரிடம் மனு அளித்துள்ளனர். ஆனால் அந்த மனு மீது எந்தவொரு முடிவும் எடுக்கப்படவில்லை. இதனை தொடர்ந்து மீண்டும் கடந்த 15ஆம் தேதி மனு அளித்திருக்கின்றனர். அந்த மனு மீதும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாததால், வருகிற 23-ஆம் தேதி நடைபெற உள்ள பொதுக்குழு மற்றும் செயற்குழு கூட்டத்திற்கு பாதுகாப்பு வழங்க உத்தரவிடக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் முன்னாள் அமைச்சர் பெஞ்சமின் வழக்கு தொடர்ந்துள்ளார். தமிழக டிஜிபி மற்றும் ஆவடி காவல் ஆணையர் மற்றும் திருவேற்காடு காவலர்களுக்கு தகுந்த பாதுகாப்பு அளிக்குமாறு உத்தரவிடக் கோரி மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது. அத்துடன் இந்த மனுவை இன்று அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என அதிமுக சார்பில் கோரப்பட்டது. இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள் இந்த வழக்கை வருகிற புதன்கிழமை( ஜூன் 22) அன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்வதாக தெரிவித்திருக்கின்றனர்.