அதிரடி! இதுவே முதல்முறை! ஆம்னி பேருந்துகளில் போக்குவரத்துறை அமைச்சர் ஆய்வு! கூடுதல் கட்டணத்தை திருப்பி தர உத்தரவு
தனியார் ஆம்னி பேருந்துகளில் அதிக கட்டணம் வசூலிப்பதை தடுக்கப்படும், கண்காணிக்கப்படும் என்று போக்குவரத்து துறை அமைச்சர்கள் சொல்லி வந்தாலும் தனியார் பேருந்துகளில் ஏறி ஆய்வு செய்தது இல்லை. ஆனால் முதல்முறையாக பண்டிகை தினத்தை முன்னிட்டு தனியார் ஆம்னி பேருந்துகளில் அதிக கட்டணம் வசூலிக்கப்படுகிறது என்று புகார்கள் வர, நேரில் ஆய்வு செய்து அதிக கட்டணம் வசூலிக்கப்பட்டதை அறிந்து அந்த கட்டணத்தை திருப்பி கொடுக்கவும் உத்தரவிட்டு அதிரடி காட்டி இருக்கிறார் போக்குவரத்துத் துறை அமைச்சர் எஸ். எஸ். சிவசங்கர்.
தமிழகத்தில் இன்று முதல் 4 நாட்களுக்கு தொடர் விடுமுறை. இன்று தமிழ் புத்தாண்டு கொண்டாட்டம் நடைபெற்று வருகிறது. இந்த நான்கு நாள் தொடர் விடுமுறை என்பதால் சென்னையில் இருந்து வெளியூர்களுக்கு செல்லும் பயணிகள் கோயம்பேட்டில் குவிந்தனர். அரசு பேருந்துகளும் கூடுதலாக இயக்கப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில் தனியார் பேருந்துகளில் பண்டிகை தினத்தை முன்னிட்டு பயணிகளிடம் கூடுதலாக கட்டணம் வசூலிக்கப்படுவது புகார் வந்திருக்கிறது. இதை அடுத்து போக்குவரத்து துறை அமைச்சர் எஸ். எஸ். சிவசங்கர் அதிரடி நடவடிக்கையாக சென்னை கோயம்பேட்டில் உள்ள தனியார் ஆம்னி பேருந்துகளில் திடீரென்று ஏறி ஆய்வு மேற்கொண்டார்.
அப்போது பேருந்தில் பயணித்த பயணிகள் இடம் எவ்வளவு கட்டணம் வசூலிக்கப்படுகிறது என்று அமைச்சர் சிவசங்கர் கேட்க, வழக்கத்தை விட கூடுதல் கட்டணம் வசூலிக்கப்பட்டுள்ளது என்று பயணிகள் கூறினர். உடனே அமைச்சர் சிவசங்கர், உங்களிடம் கூடுதலாக வசூலிக்கப்பட்ட கட்டணம் உங்களுக்கே திருப்பித் தரப்படும் என்று உறுதி அளித்தார்.
அதன்பின்னர் தனியார் பேருந்து உரிமையாளர்களிடம், பயணிகளிடம் கூடுதலாக வசூலிக்கப்பட்ட கட்டணத்தை திருப்பி கொடுத்து விடும்படி உத்தரவிட்டார்.
தனியார் ஆம்னி பேருந்துகளில் போக்குவரத்து துறை அமைச்சர் ஒருவர் நேரில் ஆய்வு செய்தது இதுவே முதல் முறை என்பதால் பரபரப்பு ஏற்பட்டது.