வள்ளுவர் சிலையை உப்பு காற்றில் இருந்து பாதுகாக்க நடவடிக்கை!!
குமரியிலுள்ள வள்ளுவர் சிலையை உப்பு காற்றில் இருந்து பாதுகாக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
திருவள்ளுவருக்கு தமிழ்நாடு அரசு குமரிக் கடலில் நீர் மட்டத்திலிருந்து 30 அடி உயரமுள்ள பாறை மீது 133 அடி உயரச் சிலை கடந்த 2000,ஆம் ஆண்டு அமைத்தது. உப்புக் காற்றிலிருந்து சிலையைப் பாதுகாக்க மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை ரசாயன கலவை பூசப்பட்டு வரும் நிலையில் இறுதியாக கடந்த 2017 ஆம் ஆண்டு ரசாயன கலவை பூசப்பட்டது. கடந்த ஜூன் மாதம் அமைச்சர் மனோ தங்கராஜ் திருவள்ளுவர் சிலைக்கு ஒரு கோடி செலவில் ரசாயன கலவை பூசும் பணியினை தொடங்கி வைத்தார்.
சிலையில் உள்ள வெடிப்புகளில் சுண்ணாம்பு கலவை பூசப்பட்டு பின்னர் காகிதக்கூழ் கொண்டு சிலையில் படிந்துள்ள உப்பு கரைசல் நீக்கப்படும் பின்னர் ஜெர்மனி நாட்டிலிருந்து வரவழைக்கப்பட்ட சிலிக்கான் எனப்படும் ரசாயன கலவை பூசப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இந்த பணிகள் முடியும் வரை சுமார் 5 மாதங்கள் திருவள்ளுவர் சிலைக்கு சுற்றுலா பயணிகள் செல்ல அனுமதி இல்லை என்று தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில் தொல்லியல் துறையின் ஆலோசனைப்படி மணல், கருப்புக்கட்டி, சுண்ணாம்பு, கடுக்காய் பொடி ஆகியவை சேர்ந்த கலவை தற்போது திருவள்ளுவர் சிலையில் பூசப்பட்டு வருகிறது. அதைத்தொடர்ந்து காகித கூழ் கொண்டு சிலையில் படர்ந்துள்ள உப்பு படிவங்களை அகற்றும் பணி நடைபெறும். இப்பணிகள் முழுவதுமாக நிறைவடைந்த பின்னரே சிலிக்கான் என்ற ரசாயன கலவை பூசப்பட்டு பணிகள் நிறைவடையும்.