நடிகர் திலகம் சிவாஜி வீட்டில் சொத்து பிரச்சனை.. நடிகர் பிரபு மீது வழக்கு..
நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் மகன்களும், நடிகர்களுமாகிய பிரபு மற்றும் ராம்குமார் ஆகியோர் மீது அவர்களது சகோதரிகள் புகார் அளித்துள்ளனர்.
சிவாஜி கணேசனை தவிர்த்துவிட்டு தமிழ் சினிமாவின் வரலாற்றை எழுதிவிட முடியாது. தன் கைதேர்ந்த நடிப்பால் அனைவரையும் கட்டிப்போட்டவர். நடிகர் திலகம் எனப் பெயர் பெற்ற சிவாஜி கணேசனுக்கு , ராம்குமார், பிரபு, சாந்தி, ராஜ்வி என நான்கு பிள்ளைகள் உள்ளனர். இதில் நடிகர் பிரபுவை அனைவருக்குமே தெரியும்.. சிவாஜி நடித்துக்கொண்டிருந்த காலத்திலேயே அவரும் சினிமாவில் நடிக்க வந்துவிட்டார்.. அதேபோல் சிவாஜியின் மூத்த மகன் ராம் குமாரையும் சில திரைப்படங்களில் பார்த்திருப்போம்.. அத்துடன் சிவாஜியின் பேரனும், நடிகர் பிரபுவின் மகனுமான விக்ரம் பிரபுவும் இன்று தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருக்கிறார்.
இந்நிலையில் மறைந்த நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் வீட்டில் சொத்துப் பிரச்சனை தலையெடுத்திருக்கிறது. சிவாஜி கணேசன் சம்பாதித்த சொத்துக்களை பிரிப்பதில் அவரது வாரிசுகளிடையே பிரச்சினை ஏற்பட்டுள்ளதை அடுத்து, இந்த விவகாரம் நீதிமன்றம் வரையிலும் சென்றிருக்கிறது. நடிகர் திலகத்தின் மகனும் பிரபல நடிகருமான பிரபு மற்றும் அவரது மூத்த சகோதரர் ராம்குமார் ஆகியோருக்கு எதிராக அவரது சகோதரிகள் சாந்தி, ராஜ்வி ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் சிவில் வழக்கு ஒன்றை தொடர்ந்துள்ளனர்.
அந்த வழக்கில், தங்களுக்கு தெரியாமல் சில சொத்துக்களை நடிகர் பிரபு, அவரது சகோதரர் ராம்குமார் ஆகியோர் விற்று விட்டதாகவும், மேலும் சில சொத்துக்களை அவர்களுடைய மகன்களின் பெயருக்கு மாற்றம் செய்து விட்டதாகவும் தெரிவித்துள்ளனர். அத்துடன் பிரபு மற்றும் ராம்குமார் ஆகியோர் ஜோடிக்கப்பட்ட உயில் ஒன்றை தயாரித்து, தங்களை ஏமாற்றி விட்டதாகவும் அவர்களது சகோதரிகள் குற்றம் சாட்டியுள்ளனர். ஆகையால் , நீதிமன்றம் தலையிட்டு தங்களுக்கு உரிமையான சொத்துக்களை மீட்டு தர வேண்டும் என்றும் அவர்கள் தொடுத்த மனுவில் குறிப்பிட்டுள்ளனர்.