அதிமுக தலைமை அலுவலகத்திற்கு காவல்துறை கூடுதல் பாதுகாப்பு!!
அதிமுக தலைமை அலுவலகம் போலீஸ் கட்டுப்பாட்டில் உள்ள நிலையில் காவல்துறையின் கூடுதல் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது.
அதிமுக தலைமை அலுவலகத்தில் நேற்று முன்தினம் ஓபிஎஸ் மற்றும் எடப்பாடி தரப்பினர் இடையே பலத்த மோதல் ஏற்பட்டது. இதில் 50-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். இது தொடர்பாக ஓபிஎஸ் தரப்பில் 200 பேர் மீதும் , எடப்பாடி பழனிசாமி தரப்பில் 200 பேர் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அத்துடன் 14 பேர் கைது செய்யப்பட்டு 15 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.
இதனிடையே நிலைமையை கட்டுப்படுத்தவும், வேறு அசம்பாவித செயல்கள் நடப்பதை தவிர்க்கவும் வருவாய் துறை அதிமுக தலைமை அலுவலகத்திற்கு பூட்டு போட்டு சீல் வைத்தது. அத்துடன் இது குறித்து ஓபிஎஸ் மற்றும் ஈபிஎஸ் இருவரும் வரும் 27ஆம் தேதி நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க கோட்டாட்சியர் நோட்டீஸ் அனுப்பியுள்ளார். இதன் காரணமாக கடந்த மூன்று நாட்களாக அதிமுக தலைமை அலுவலகம் போலீசார் கட்டுப்பாட்டில் உள்ளது
இந்நிலையில் சென்னை, ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்திற்கு காவல்துறை கூடுதல் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பு பணியில் ஈடுபடும் காவல்துறையினரின் எண்ணிக்கை 50லிருந்து 150ஆக உயர்த்தப்பட்டுள்ளது. மொத்தமாக நாள் ஒன்றுக்கு 450 காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.அவ்வை சண்முகம் சாலையில் 10க்கும் மேற்பட்ட காவல்துறை வாகனங்கள் ரோந்து பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.