மாமல்லபுரத்தை சுற்றிப்பார்க்க மாலை 6 மணி வரை அனுமதி இலவசம்..
உலக பாரம்பரிய தினத்தையொட்டி இன்று மாமல்லபுரம் சுற்றுலாத்தளத்தை பொதுமக்கள் இலவசமாக கண்டுகளிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆண்டுதோறும் ஏப்ரல் மாதம் 18 ஆம் தேதி உலக பாரம்பரிய தினம் கடைபிடிக்கப்படுகிறது. உலகில் உள்ள பண்டைய கால பாரம்பரியத்தை காக்கவும், கலாச்சார நினைவுச் சின்னங்களை பேணிகாக்கவும், அத்தகைய பாரம்பரியம் மற்றும் கலாச்சாரம் குறித்து அடுத்த தலைமுறைக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாகவும் இந்த உலக பாரம்பரிய தினம் கடைபிடிக்கப்படுகிறது.
அந்த வகையில், இன்று உலக பாரம்பரிய தினத்தையொட்டி செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரத்தில் உள்ள புராதன சின்னங்களான கடற்கரை கோவில், ஐந்து ரதம், அர்ச்சுனன் தபசு, வெண்ணை உருண்டை பாறை உள்ளிட்ட ஆகியவற்றை இலவசமாக கண்டுகளிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இன்று மாலை 6 மணி வரை மாமல்லபுரத்தை இலவசமாக கண்டு களிக்கலாம் என்கிற தொல்லியல் துறையின் அறிவிப்பு மக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அத்துடன் காலை 9.30 மணிக்கு மாமல்லபுரம் கடற்கரை கோவில் பகுதியில், செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் ராகுல்நாத், புகைப்பட கண்காட்சியை துவக்கி வைத்துள்ளார். மேலும் மாமல்லபுரம் சிற்பங்கள் குறித்து நுால் ஒன்றையும் அவர் வெளியிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.