ஒட்டுமொத்த பெண்களும் பேருந்தில் இலவச பயணத்தை புறக்கணிக்க வேண்டும் - பிரேமலதா விஜயகாந்த்..
தமிழகத்தில் உள்ள ஒட்டுமொத்த பெண்களும் , பேருந்தில் ஓசியில் பயணம் வேண்டாம் என்று புறக்கணிக்க வேண்டும் என்று தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
கட்சி நிகழ்வுகளில் பங்கேற்பதற்காக சென்னையில் இருந்து விமான மூலமாக மதுரை வந்த தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த், அங்கு செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், “ஆம்னி பேருந்து முதலாளிகளுக்கு பண்டிகை காலத்தில் தான் வருமானம் கிடைக்கும். வசதியானவர்கள் ஆம்னி பேருந்தில் செல்லலாம்; ஏழை மக்கள் அரசு பேருந்து பயணிக்கலாம் என அமைச்சர் சொல்கிறார். இதை சொல்வதற்கு எதற்கு அமைச்சர் என்று தெரியவில்லை. ஒரு முறை பயணிப்பதற்கு 4000 ரூபாய் என்றால் அதன் பிறகு ஊருக்கு சென்று பண்டிகை கொண்டாடுவதில் அர்த்தமே இல்லை.
சாதாரண நாட்களில் இருக்கும் கட்டணத்தை விட பண்டிகை காலங்களில் கட்டணத்தை உயர்த்துகிறார்கள். எல்லாமே வியாபாரம் என்றால் இந்த அரசும் வியாபார ரீதியாக நடக்கிறதா? இது மக்களுக்கான அரசாக இல்லையா? என்கிற கேள்வி எழுகிறது. இது கண்டனத்திற்குரியது. அரசு பேருந்து தரமாக வைத்தால் மக்கள் அரசு பேருந்துகளில் பயணிப்பார்கள். அப்படி இல்லை என்றால் ஆம்னி பேருந்து போல் இருக்கும் அரசு பேருந்துகளில் பண்டிகை காலங்களில் குறைவாக இருந்தால் மக்கள் பயணிப்பார்கள்.
பெட்ரோல் குண்டு வீச்சு கலாச்சாரம் கண்டிக்க கூடிய ஒரு விஷயம் முதல்வர் சட்ட ஒழுங்கை கையில் வைத்திருக்கிறார். ஆனால் தமிழகத்தில் சட்ட ஒழுங்கு கேள்விக்குறியாக உள்ளது. யார் தவறு செய்திருந்தாலும் தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் நிச்சயம் கைது செய்யப்பட வேண்டும். ஆனால் முதலமைச்சர் இதைப் பற்றி வாய் திறக்கக்காமல் இருக்கிறார். இதை அதிமுகவினர் வேண்டுமென்று செய்ததாக ஒரு புறம் கருத்து பரவி வருகிறது. ஆனால் இது உண்மையானால் நல்லது.
ஒரு அமைச்சர் ஓசியில் பெண்கள் பயணிக்கிறார்கள் என்கிறார். மற்றொருவர் பெண்களுக்கு மாதம் ஆயிரம் கொடுப்பதற்கு இப்போதுதான் சில்லறை மாற்றுகிறோம் என்கிறார். தேர்தலில் வெற்றி பெறுவதற்கு முன்பு ஒரு நிலைப்பாடு வெற்றிக்கு பின் ஒரு நிலைப்பாடு. ஓசியில் பயணம் வேண்டாமென்று அந்த மூதாட்டி சொன்னது போல ஒட்டுமொத்த தமிழக மக்களும் புறக்கணிக்க வேண்டும் என்பதுதான் என்னுடைய வேண்டுகோள். அப்படி புறக்கணித்தால் தான் இந்த ஆட்சியாளர்களுக்கு அது ஒரு மிகப்பெரிய அச்சுறுத்தலை ஏற்படுத்தும். இது போன்ற கருத்துக்கள் கண்டனத்திற்குரியது” என்று அவர் கூறினார்.