அம்பேத்கர் நினைவு நாள் : பிரதமர், முதல்வர் உள்ளிட்ட தலைவர்கள் புகழாரம்..

 
அம்பேத்கர்

இந்தியாவின் சட்ட மாமேதை அண்ணல் அம்பேத்கரின் 66வது நினைவு நாள் நாடு முழுவதும் இன்று அனுசரிக்கப்பட்டு வருகிறது. இதனை ஒட்டி   அரசியல் கட்சித் தலைவர்கள் அம்பேத்கருக்கு சமூக வலதள பக்கங்களில் புகழாரம் சூட்டி வருகின்றனர்.

பிரதமர் மோடி : “மகாபரிநிர்வாண் தினத்தில், டாக்டர் பாபாசாகேப் அம்பேத்கர் நமது நாட்டுக்கு ஆற்றிய சிறப்பான சேவையை நினைவுகூர்ந்து நான் அவருக்கு மரியாதை செலுத்துகிறேன். அவரது போராட்டங்கள் லட்சக்கணக்கானோருக்கு நம்பிக்கையை அளித்தது. மிக விரிவான அரசியல் சாசனத்தை இந்தியாவுக்கு அளிக்க அவர் மேற்கொண்ட முயற்சிகள் ஒருபோதும் மறக்க முடியாதவை. ” என்று பதிவிட்டுள்ளார்.  

மோடி, அம்பேத்கர்

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்: “ஒடுக்கப்பட்ட மக்களின் அடிமை விலங்கை ஒடிக்க புரட்சி செய்த புத்துலக புத்தர் அம்பேத்கர் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் புகழாரம் சூட்டியுள்ளார்.  இதுகுறித்து முதலமைச்சர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், சமத்துவத்தை நோக்கிய போராட்ட பயணத்தில் வடக்கு கண்ட பெரியார்; புரட்சியாளர் அம்பேத்கரின் நினைவு நாளில் ஆதிக்கமற்ற சமுதாயத்தை அமைத்தே தீருவோம் என சூளுரைத்து உறுதியெடுப்போம்” என்று குறிப்பிட்டுள்ளார்.

அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம் : “இந்திய அரசமைப்புச் சட்டத்தை உருவாக்கிய பெருமைக்குரியவரும், விளிம்பு நிலை மக்களின் விடிவெள்ளியாக திகழ்பவரும், இந்தியர்களின் இதயமாய் விளங்குபவருமான டாக்டர் B.R. அம்பேத்கர் அவர்களின் நினைவு நாளான இன்று அவருக்கு எனது வீர வணக்கத்தினையும், அஞ்சலியையும் தெரிவித்துக் கொள்கிறேன்.” என்று  ட்விட்டரில் பதிவிட்டிருக்கிறார்.

ஸ்டாலின்

மக்கள் நீதி மய்ய தலைவர் கமல்ஹாசன்: “இந்தியாவின் சட்ட மாமேதை அண்ணல் அம்பேத்கரின் 66வது நினைவு நாளை ஒட்டி மக்கள் நீதி மய்ய தலைவர் கமல்ஹாசன் ட்வீட் செய்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், நிர்வாக ரீதியில் நிர்மாணிக்கப்பட்டதைவிடவும் புதிய இந்தியா சமூக நீதியில் கட்டமைக்கப்பட்டதே சிறப்பு. ஒடுக்கப்பட்டோருக்கும் உரிமையுடையதே இந்தியா என்னும் சிந்தனையை விதைத்த பெருந்தகைமையாளர் பாபாசாகேப் அம்பேத்கரின் நினைவு நாளில் அவரது லட்சியத்தைத் தொடர உறுதி பூணுவோம்” என்று கூறியுள்ளார்.  

டிடிவி தினகரன்

அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன்: “அண்ணல் அம்பேத்கரின் 66வது நினைவு நாளை முன்னிட்டு அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் ட்வீட் செய்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், இந்திய அரசியலமைப்பின் தந்தை, ஒடுக்கப்பட்ட மக்களின் உயர்வுக்காக வாழ்நாளெல்லாம் பாடுபட்ட சட்டமேதை டாக்டர். பி.ஆர். அம்பேத்கர் அவர்களின் நினைவு நாள் இன்று. உலக நாடுகள் போற்றக்கூடிய சட்டத்திட்டங்களை நமக்கு வகுத்து தந்து ஒவ்வொரு குடிமகனும் சுதந்திரத்தோடும், சமநிலையோடும் வாழ்வதற்கான அடிப்படையை ஏற்படுத்தி, பொருளாதாரம், பெண்ணுரிமை, தொழிலாளர் நலன் உட்பட பல்வேறு துறைகளில் அம்பேத்கர் அவர்கள் ஆற்றிய அரும்பணிகளை நினைவுகூர்ந்து போற்றிடுவோம்” என்று தெரிவித்துள்ளார்.