1250 கிராமப்புற கோயில்களில் திருப்பணிகள் மேற்கொள்ள ரூ.25 கோடி ஒதுக்கீடு - இந்து சமய அறநிலையத்துறை
தமிழ்நாட்டில் உள்ள 1250 கிராமப்புறத் திருக்கோயில் திருப்பணித் திட்டத்திற்கு 25 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக இந்து சமய அறநிலையத் துறை தெரிவித்துள்ளது.
இந்து சமய அறநிலையத் துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: கடந்த சட்டமன்ற 2021-22 அறிவிப்பில் கிராமப்புறத் திருக்கோயில் திருப்பணித் திட்டத்தின் கீழ் கிராமப் பகுதிகளில் அமைந்துள்ள 1250 திருக்கோயில்களுக்கு திருப்பணிகள் மேற்கொள்ள ரூ.2 இலட்சமாக உயர்த்தி வழங்கப்படும் என்ற அறிவிப்பு வெளியிடப்பட்டிருந்தது. இதற்காக ரூ.25 கோடி ஒதுக்கீடு செய்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பினை செயல்படுத்தும் பொருட்டு சார்நிலை அலுவலர்களிடமிருந்து வரப்பெற்ற அறிக்கைகளின்படி 1250 திருக்கோயில்கள் இறுதி செய்யப்பட்டு திருக்கோயில் பெயர் விவரப்பட்டியல் இத்துறையின் வலைதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.
1250 திருக்கோயில்களில் திருப்பணி மேற்கொள்ள தொல்லியல் வல்லுநர் கருத்துரு மற்றும் மண்டல ஸ்தபதி கருத்துருவுடன் மண்டல அளவிலான வல்லுநர் குழுவின் பரிசீலனைக்குட்படுத்தி அதனை தொடர்ந்து மாநில அளவிலான வல்லுநர் குழுவின் பரிந்துரை பெற்று பொதுநலநிதியின் மூலம் மண்டல மண்டல இணை ஆணையர் நிலையில் திருக்கோயில் திருப்பணி மேற்கொள்வதற்கான மதிப்பீட்டிற்கு மதிப்பீடு அங்கீகாரம் மற்றும் தொழில்நுட்ப அனுமதி வழங்கி பணிகள் மேற்கொள்ளவும், விரைவில் திருப்பணிகள் முடித்து குடமுழுக்கு நடத்த அலுவலர்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.