'காலநிலை அவசரநிலையை தமிழக அரசு பிரகடனம் செய்ய வேண்டும்' - அன்புமனி வலியுறுத்தல்..
காலநிலை அவசரநிலையை தமிழக அரசு பிரகடனம் செய்ய வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
சென்னை பெசன்ட் நகர் கடற்கரைச் சாலையில் பசுமை தாயகம் சார்பில் காலநிலை மாற்றம் குறித்த விழிப்புணர்வு மாரத்தான் ஓட்டம் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், இயக்குனர் விக்னேஷ் சிவன் மற்றும் நடிகர் சித்தார்த் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர். 1000க்கும் மேற்பட்ட பொதுமக்கள் மற்றும் பாமக தொண்டர்கள் பலர் கலந்து கொண்ட இந்த மாரத்தானை அன்புமணி ராமதாஸ் தொடங்கி வைத்தார். சென்னை பெசன்ட் நகரில் தொடங்கிய இந்த மாரத்தான் ஓட்டம் அடையார் வழியாக சென்று மீண்டும் பெசன்ட் நகரில் முடிவடைந்தது.
இந்த நிகழ்ச்சியில் பேசிய அன்புமணி, “தமிழக அரசு இந்த காலநிலை மாற்றம் சம்பந்தமான பிரச்சனையை கையில் எடுக்க வேண்டும். உடனடியாக காலநிலை அவசரநிலையை தமிழக அரசு பிரகடனம் செய்ய வேண்டும். சென்னை மட்டுமல்லாது தமிழகம் மட்டுமல்லாது உலக அளவில் இயற்கை சீற்றங்கள் அதிகமாக உள்ளன. காலநிலை மாற்றம் குறித்து அனைவரிடமும் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்” என்று தெரிவித்தார்.
பின்னர் பேசிய நடிகர் சித்தார்த், “சென்னை ரன் என்ற மாரத்தான் ஓட்டத்தில் கலந்து கொள்வது மகிழ்ச்சி அளிக்கிறது. நம்மை காப்போம் அல்லது நமது உறவினரை காப்போம் எனக் கூறிக் கொண்டிருந்தோம். தற்போது அதை எல்லாம் விட்டுவிட்டு இந்த பூலோகத்தை காப்போம் என்ற நிலைமை வந்துவிட்டது” என்றார். அவரைத் தொடர்ந்து இயக்குனர் விக்னேஷ் சிவன், இவ்வளவு கூட்டத்தை நான் எதிர்பார்க்கவில்லை எனவும், மழை காலம் தொடங்கியுள்ளதால், நம்மை நாம் காத்துக் கொள்ள வேண்டும் என்றும் கூறினார். வரும் காலங்களில் இந்த நிலைமை நீடிக்க வாய்ப்புள்ளதால், நாம் முன்னெடுப்புகளை கையில் எடுத்து பொதுமக்களை காக்க வேண்டும்” என்றும் தெரிவித்தார்.