ரூ.9 கோடி செலவில் புதுப்பிக்கப்படுகிறது அண்ணா மேம்பாலம் - முதலமைச்சர் அறிவிப்பு..
சென்னை அண்ணா மேம்பாலம் ரூ.9 கோடி செலவில் புதுப்பிக்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
1971 ஆம் ஆண்டு அப்போதைய முதலமைச்சர் கருணாநிதி ஆட்சியில் திட்டமிடப்பட்டு 21 மாதங்களில் கட்டி முடிக்கப்பட்டது அண்ணா மேம்பாலம். அண்ணா சாலையின் மையப்பகுதியான நுங்கம்பாக்கத்தில் ராதாகிருஷ்ணன் சாலை, ஜி.என்.செட்டி சாலை, நுங்கம்பாக்கம் சாலை சந்திக்கும் பகுதியில் அமைந்துள்ள அண்ணா மேம்பாலம் , சென்னையின் அடையாளமாகவே பார்க்கப்படுகிறது. ரூ.66 லட்சம் மதிப்பீட்டில் 250 அடி நீளம் 48 அடி அகலத்தில் கட்டபட்டுள்ள இந்த மேம்பாலம் 1973-ம் ஆண்டு ஜூலை 1-ந் தேதி முதல் பயன்பாட்டில் உள்ளது.
சென்னையில் கட்டப்பட்ட முதல் மேம்பாலம் என்ற பெருமைக்குரியது அண்ணா மேம்பாலம். அதேபோல இந்திய அளவில் கட்டப்பட்ட 3-வது பெரிய மேம்பாலமாகவும் அப்போது திகழ்ந்தது குறிப்பிடத்தக்கது. இதன் அருகிலேயே ஜெமினி ஸ்டூடியோ இருந்ததால் ஜெமினி மேம்பாலம் என்றும் அழைக்கப்படுகிறது. இந்த மேம்பாலம் கட்டப்பட்டு 50 ஆண்டுகள் தொடங்குவதையொட்டி அதனை புதுப்பிக்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
அதன்படி ரூ.9 கோடி செலவில் அண்ணா மேம்பாலம் புதுப்பிக்கப்பட உள்ளது. இதனையொட்டி அண்ணா மேம்பால சந்திப்பில் கதீட்ரல் ரோடு செல்லும் பகுதியில் பல்லவர் கால பாணியில் செதுக்கப்பட்ட 6 அடி உயர சிங்கம் சிலையை நிறுவவும் திட்டமிடப்பட்டுள்ளது. மேலும் . மேம்பாலத்தின் ஒவ்வொரு நுழைவு பகுதி, வெளியேறும் பகுதிகள் என 8 இடங்களில் அழகிய கல்தூண்கள் அமைக்கப்படும் என்றும், இந்த கல் தூண்களை புகழ்பெற்ற வடிவமைப்பு கலைஞர் ஸ்ரொஸ்கி மருது வடிவமைக்க உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
அத்துடன் மேம்பாலத்தின் அருகே புல் தரைகளில் பொதுமக்கள் பார்க்கும் வகையில் அழகிய தமிழ் எழுத்துக்களும், தமிழகத்தின் வரலாற்றை பறைசாற்றும் வகையில் கலை வடிவத்துடன் கூடிய சிற்பங்களும் நிறுவ திட்டமிடப்பட்டுள்ளதாக கூறினார். பேரறிஞர் அண்ணா, கருணாநிதி ஆகியோரது பொன்மொழிகளும் தூண்களில் செதுக்கப்படும் என்றும், மேம்பால பக்கவாட்டு சுவர்களில் தமிழ் நாகரிகம், திராவிட அரசியலின் அடையாளங்களை பிரதிபலிக்கும் சிற்பங்கள், ஓவியங்கள் போன்ற அழகிய வேலைப்பாடுகள் செய்யப்படும் என்றும் தெரிவித்துள்ளார். அண்ணா மேம்பாலம் அருகே உள்ள அமெரிக்க தூதரகம் பகுதியில் விசா பெறுவதற்காக பிளாட்பாரத்தில் காத்துக்கிடக்கும் பொதுமக்களின் வசதிக்காக இருக்கை வசதிகள் செய்து கொடுக்கப்படும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.