ஆரஞ்சு நிற ஆவின் பால் பாக்கெட்டை நிறுத்த திட்டம் - அண்ணாமலை குற்றச்சாட்டு

 
annamalai

ஆவினில் ஆரஞ்சி நிற பால் பாக்கெட்டை நிறுத்த தமிழக அரசு முயற்சித்து வருவதாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை குற்றம் சாட்டியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:  தமிழகத்தில் ஆவின் பால் நிறுவனம் அதிகமாக விற்பனை செய்து வந்த, மக்கள் விரும்பி வாங்கிய, அதிக சத்துமிக்க ஆரஞ்சு வண்ண ஆவின் பால் பாக்கெட் நிறுத்தப்பட உள்ளதாக அறிகிறேன். அதற்கு பதிலாக சிவப்பு வண்ண பால் பாக்கெட் வாங்க மக்கள் கட்டாயப்படுத்தப்படுகிறார்கள். பால் மற்றும் பால் பொருட்கள் தயாரிப்பு தொழிலில் ஈடுபட்டுள்ள தனியார் நிறுவனங்கள் எல்லாம் மிகச்சிறப்பாக லாபம் ஈட்டி இயங்கி கொண்டிருக்கும்போது தமிழக அரசின் ஆவின் நிறுவனம் மட்டும் எப்போதும் நஷ்ட கணக்கு காட்டி வருவது ஏன்?  ஒரு பக்கம் ஆவின் இனிப்பு வகைகளின் விலையை இந்த அரசு உயர்த்தி உள்ளது. 

Annamalai

இப்போது தீபாவளிக்கு பால் மற்றும் பால் பொருட்களை பயன்படுத்தி பலகாரங்கள் எல்லாம் தயாரிக்கும் இந்த வேளையிலே மறைமுகமாக பால் விலையை உயர்த்தும் வகையில் ஆரஞ்சு வண்ணத்தை தடை செய்து சிவப்பு நிறத்தை முன்னிறுத்துவதால் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள். அதிலும் கறவை மாடு வைத்து பால் உற்பத்தி செய்துக்கொண்டிருக்கும் ஏழை விவசாய மக்களுக்கு கொள்முதல் விலையை உயர்த்தி கொடுக்காமல் விற்பனை விலையை மட்டும் அதிகரித்து மக்களுக்கு கூடுதல் சுமையை ஏற்படுத்தி உள்ளது. ஆளும் அரசுக்கு ஆரஞ்சு வண்ணத்துக்கு பெருகி வரும் மக்கள் ஆதரவு அதிக வெறுப்பாகி விட்டது போல, அதனால் சிவப்பு வண்ணத்தை அதிகமாக வெளியிட்டு மக்கள் விரும்பாத சத்துக்குறைவான சிவப்பு வண்ணத்தை பயன்படுத்த கட்டாயப்படுத்தப்படுகிறார்கள். மக்கள் கருத்தை அறிந்து செயல்படுவதே மக்களாட்சி. இவ்வாறு அண்ணாமலை தனது அறிக்கையில் கூறியுள்ளார்.