சென்னை மாமல்லபுரத்தில் ஜூலை 27 - ஆகஸ்ட் 10 வரை 44வது செஸ் ஒலிம்பியாட் - அமைச்சர் மெய்யநாதன் அறிவிப்பு.
44வது செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் சென்னை அடுத்த மாமல்லபுரத்தில் ஜூலை 27 முதல் ஆகஸ்ட் 10 வரை நடைபெறும் என அமைச்சர் மெய்யநாதன் தெரிவித்துள்ளார்.
1927ஆம் ஆண்டு முதல் நடத்தப்பட்டு வரும் செஸ் ஒலிம்பியாட் போட்டி, 2 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடத்தப்படும். இதுவரை நடைபெற்ற 43 செஸ் ஒலிம்பியாட் போட்டிகளில் ஒன்று கூட இந்தியாவில் நடந்த வாய்ப்பு கிடைக்கவில்லை. ஆனால் தற்போது 2022ஆம் ஆண்டுக்கான ஏலத்தில் இந்தியா வென்றுள்ளது. இதன் மூலம் சென்னையில் 44வது செஸ் ஒலிம்பியாட் நடைபெற இருக்கிறது. முன்னதாகவே சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் தமிழகத்தில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது.
சென்னை மாமல்லபுரத்தில் நடைபெற உள்ள இந்த போட்டி, தமிழகத்திற்கு பெருமை கிடைத்துள்ளதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம் தெரிவித்திருந்தார். 44வது செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் ஜூலை 27ம் தேதி முதல் ஆகஸ்ட் மாதம் 10ம் தேதி வரை மாமல்லபுரத்தில் நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய விளையாட்டுத்துறை அமைச்சர் மெய்யநாதன், செஸ் ஒலிம்பியாட் போட்டியில் 200 நாடுகளில் இருந்து 2,000 வீரர்கள் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுவதாக கூறினார். இதற்காக கிழக்கு கடற்கரை சாலையில் (ஈசிஆர்) உள்ள நட்சத்திர ஹோட்டலில் 2,500 அறைகள் முன்பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டிகளுக்கான ஏற்பாடுகளை தமிழக அரசு தீவிரமாக செய்து வருவதாகவும் தெரிவித்தார்.