மோடிக்கு எதிரான ஆவணப்படம் : மாணவர்களை கைது செய்வது கருத்துரிமைக்கு எதிரானது!

 
tn

மோடி - பிபிசி ஆவணப்படத்தை பார்த்த மாணவர்களை கைது செய்வது கருத்துரிமைக்கு எதிரானது என்று வேல்முருகன் சாடியுள்ளார்.

இதுக்குறித்து தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவரும், எம்எல்ஏவுமான வேல்முருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில், "இங்கிலாந்தின் பிரபல தனியார் ஊடக நிறுவனமான பிபிசி, இந்தியாவில் 2002-ம் ஆண்டு நடந்த குஜராத் கலவரம் தொடர்பான விசாரணை நடத்தி ஆவணப்படத்தை வெளியிட்டிருந்தது. இதில், குஜராத் கலவரம் நடக்க அப்போது குஜராத் முதலமைச்சராக இருந்த நரேந்திர மோடியும் காரணம் என்பதை தகுந்த சான்றுகளோடு அம்பலப்படுத்தியுள்ளது. 2002-ம் ஆண்டு பிப்ரவரி 27-ம் தேதி கோத்ரா ரயில் எரிப்பு சம்பத்தில் 59 பேர் உயிரிழந்தனர். இதை அடிப்படையாக வைத்துதான் குஜராத்தில் கலவரம் வெடித்து.இந்தக் கலவரத்தின் முடிவில் 790 இஸ்லாமியர்கள், 254 இந்துக்கள் கொல்லப்பட்டதாகவும், 223 பேர் காணாமல் போனதாகவும், 2,500 பேர் படுகாயமடைந்ததாகவும் 2005-ம் ஆண்டு நாடாளுமன்றத்தில், இந்திய ஒன்றிய அரசு  கூறியதை தான் ஆவணப்படத்தில்  கூறியிருக்கிறது பிபிசி.

பிபிசி, மோடி

இந்தியா-மோடிக்கான கேள்விகள் என்னும் தலைப்பில் வெளியாகி இருக்கும் இந்த  ஆவணப்படத்தின் வாயிலாக, அம்பலப்பட்டு விடுவோமோ என்கிற அச்சத்தில், மோடி தலைமையிலான பாசிக பாஜக அரசு, ஆவணப்படத்திற்கு தடை விதித்திருக்கிறது.        குறிப்பாக, பிபிசி-யின் ஆவணப்படத்தை ஒன்றிய பாஜக அரசு, ஐ.டி. சட்டத்தின் பிரிவுகளை தவறாக பயன்படுத்தி தடை செய்துள்ளது.     ஒன்றிய அரசின் குறுக்கு புத்தியை கண்டிப்பதோடு மட்டுமின்றி, தடை செய்யப்பட்ட படத்தை நாடு முழுவதும் சமூக வலைத்தளங்கள் வழியாக மக்களிடம் கொண்டு சேர்க்கும் வகையில், சமூக செயற்பாட்டாளர்களும், ஜனநாயக அமைப்புகளும் ஆவணப்படத்தை திரையிட்டு வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக, சென்னை பல்கலைக்கழகத்தில்  மாணவர் அமைப்பினர் ஆவணப்படம் திரையிட்டுள்ளனர். இதனை பொருத்துக்கொள்ளாத பல்கலைக்கழக நிர்வாகம், ஆவணப்படம் திரையிடுவதை தடுத்துள்ளது. அதோடு, மாணவர்கள் ஆவணப்பட திரையிடல் செய்வதை காவல்துறை தடுத்ததுடன், செல்போனில் படம் பார்த்ததற்காக அவர்களை கைது செய்துள்ளது. ஆவணப்படம் திரையிடல் என்பது அடிப்படை உரிமையாகும்.

tn

ஆனால், அந்த அடிப்படை உரிமைக்கு எதிராக, பல்கலைக்கழக நிர்வாகமும், காவல்துறையும் செயல்பட்டிருப்பது ஏற்றுக்கொள்ள முடியாது. பல்கலைக்கழகம், காவல்துறையின் இத்தகைய போக்கை, தமிழக வாழ்வுரிமைக் கட்சி வன்மையாக கண்டிக்கிறது.எனவே, இந்தியா-மோடிக்கான கேள்விகள்' எனும் குஜராத் படுகொலை குறித்தான பி.பி.சி. ஊடக நிறுவனத்தின் ஆவணப்படத்தை தமிழ்நாடு முழுவதும் கொண்டு சேர்க்கவும், கைது செய்யப்பட்ட மாணவர்களை விடுவிக்கவும் தமிழ்நாடு அரசு முன் வர வேண்டும் என தமிழக வாழ்வுரிமைக் கட்சி கேட்டுக்கொள்கிறது. அதோடு, 2002 ஆம் ஆண்டு குஜராத்தில் மூவாயிரத்திற்கும் மேற்பட்ட இசுலாமிய சொந்தங்களை படுகொலை செய்யப்பட்ட கோர நிகழ்வைப் பதிவுசெய்து, அதனை தகுந்த ஆதாரங்களோடு  ஆவணப்படமாக பிபிசி ஊடக நிறுவனம் வெளியிட்டிருக்கிறது. இது வரவேற்கதக்கது; பாராட்டுக்குரியது. முக்கியமாக, இன்றைய தலைமுறையினரும், எதிர்கால தலைமுறையினரும் அறிந்து கொள்ள வேண்டிய ஒன்று என்பதை தமிழக வாழ்வுரிமைக் கட்சி தெரிவித்துக்கொள்கிறது" என்று குறிப்பிட்டுள்ளார்.