சிதம்பரம் நடராஜர் கோயிலில் ஆருத்ரா தரிசன விழா கொடியேற்றத்துடன் தொடக்கம்..

 
சிதம்பரம் நடராஜர் கோயிலில் ஆருத்ரா தரிசன விழா கொடியேற்றத்துடன் தொடக்கம்..

சிதம்பரம் நடராஜர் கோயிலில் ஆருத்ரா  தரிசன விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது..  

உலக புகழ்பெற்ற சிதம்பரம் நடராஜர் கோவிலில் ஒவ்வொரு ஆண்டும்  மார்கழி மாதம் ஆருத்ரா தரிசனமும், ஆனி மாதம் ஆனித்திருமஞ்சன தரிசன  திருவிழாக்கள் தொன்று தொட்டு நடைபெற்று வருகின்றன. அதன்படி இந்த ஆண்டு மார்கழி மாத ஆருத்ரா தரிசன விழா இன்று காலை (28-ந் தேதி) கொடியேற்றத்துடன் தொடங்கியது பொது தீட்ஷிதர்களின் உத்ஸவ ஆச்சார்யர் சு.ரா.நடராஜ குஞ்சிதபாத தீஷிதர் மார்கழி ஆருத்ரா திருவிழாவை கொடியேற்றத்துடன் தொடங்கி வைத்தார்.   கொடி மரத்திற்கு நூறுக்கும் மேற்பட்ட பொது தீட்சிதர்கள் வேத மந்திரங்கள் முழங்க, மேள தாளங்கள் ஒலிக்க ஆருத்ரா தரிசன கொடியேற்ற நிகழ்வு நடைபெற்றது.  

ஆருத்ரா தரிசன விழா

தொடர்ந்து 10 நாட்கள் நடைபெறும் இந்த விழாவில், நாள்தோறும் சுவாமி வீதி உலா நடைபெறும்.  அந்தவகையில் நாளை (29-ந்தேதி) வெள்ளி சந்திர பிரபை வாகன வீதி உலா, 30-ந் தேதி தங்க சூரிய பிரபை வாகனத்தில் வீதி உலா, 31-ந் தேதி வெள்ளி பூத வாகனத்தில் வீதி உலா, ஜன.1-ந் தேதி வெள்ளி ரிஷப வாகனத்தில் தெரு வடைச்சான் வீதி உலாவும், 2-ந் தேதி வெள்ளி யானை வாகன வீதி உலாவும், 3-ந் தேதி தங்க கைலாச வாகன வீதி உலா மற்றும் 4-ந் தேதி தங்க ரதத்தில் சோமாஸ்கந்தர் வெட்டுக்கு திரையில் வீதி உலா நடைபெற இருக்கிறது. தொடர்ந்து  5-ந் தேதி தேர்த்திருவிழாவும், இரவு 8 மணிக்கு ஆயிரங்கால் முன் முகப்பு மண்டபத்தில் ஏககால லட்சார்ச்சனையும்  நடைபெறுகிறது.

சிதம்பரம் நடராஜர் கோயிலில்  ஆருத்ரா தரிசன விழா  தொடக்கம்!

இதனையடுத்து  6-ந் தேதி வெள்ளிக்கிழமை அதிகாலை சூரிய உதயத்திற்கு முன்பு காலை 4 மணி முதல் 6 மணி வரை சிவகாமசுந்தரி சமேத நடராஜ மூர்த்திக்கு மகாபிஷேகம் நடைபெறுகிறது. அதன் பின்பு சொர்ண அபிஷேகம் நடைபெறும்.  காலை 10 மணிக்கு சித்சபையில் ரகசிய பூஜையும், பஞ்ச மூர்த்தி வீதி உலாவும் நடைபெற்ற பின்னர் பிற்பகல் 2 மணிக்கு மேல் ஆருத்ரா தரிசனமும், ஞானகாச சித்சபா பிரவேசமும் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.  இதனைதொடர்ந்து  7-ந் தேதி பஞ்சமூர்த்தி முத்துப்பல்லக்கு வீதி உலாவுடன் உற்சவம் நிறைவுபெறுகிறது. விழா ஏற்பாடுகளை கோவில் பொது தீட்ஷிதர்கள் மேற்கொண்டு வரும் நிலையில்,  சிதம்பரம் நகராட்சி சார்பில் குடிநீர் மற்றும் சுகாதார வசதிகள் செய்யப்பட்டுள்ளன.  மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சக்திகணேசன் தலைமையில் 500-க்கும் மேற்பட்ட போலீசார் மற்றும் ஊர்க்காவல் படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.