ஆறுமுகசாமி விசாரணை ஆணையம் முன்பு முதன்முறையாக ஓபிஎஸ், இளவரசி ஆஜர்..
ஜெயலலிதாவின் மரணம் தொடர்பாக விசாரணை நடத்தி வரும் ஆறுமுகசாமி ஆணையம் முன்பு முதன்முறையாக முன்னாள் முதல்வரும், அதிமுக ஒருங்கிணைப்பாளருமான ஓபிஎஸும், சசிகலாவின் அண்ணன் மனைவி இளவரசியும் ஆஜராகினர்.
கடந்த 2017 ஆம் ஆண்டு முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் மரணம் தொடர்பாக விசாரணை நடத்த ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை ஆணையத்தை தமிழக அரசு அமைத்தது. ஓராண்டுக்கும் மேலாக ஆறுமுகசாமி தலைமையிலான ஆணையம் அப்பல்லோ மருத்துவர்கள் , செவிலியர்கள், ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் மற்றும் சாட்சிகள் என 154 பேரிடம் விசாரணை நடத்தியது. பின்னர் அப்பல்லோ நிர்வாகம் தொடர்ந்த வழக்கு காரணமாக விசாரணை தடைபட்டது.
பின்னர் 2 ஆண்டுகளுக்குப் பிறகு கடந்த 7ம் தேதி ஆறுமுகசாமி ஆணையம் மீண்டும் விசாரணையை தொடங்கியது. இதனையடுத்து நீதிமன்ற உத்தரவின்படி ஆறுமுகசாமி ஆணையத்துக்கு மருத்துவர் சந்தீப் சேத் தலைமையில் 6 பேர் அடங்கிய குழுவை எய்ம்ஸ் மருத்துவமனை நியமித்தது. ஜெயலலிதா மரணம் தொடர்பான விசாரணை ஏற்கனவே 90% முடிவடைந்துவிட்டது குறிப்பிடத்தக்கது. இதற்கிடையே, மார்ச் 21ம் தேதி நேரில் ஆஜராக அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் சசிகலாவின் அண்ணன் மனைவி இளவரசிக்கு ஆறுமுகசாமி ஆணையம் சம்மன் அனுப்பியது.
கடந்த 4 ஆண்டுகளில் ஓ.பன்னீர்செல்வத்திற்கு 8 முறை சம்மன் அனுப்பி ஆஜராகாத நிலையில், 9ஆவது முறையாக சம்மன் அனுப்பப்பட்டது. அதேபோல் இளவரசிக்கும் பலமுறை சம்மன் அனுப்பியும் அவர் ஆஜராகாத நிலையில், இன்று முதன்முறையாக இருவரும் நேரில் ஆஜராகியிருக்கின்றனர். காலை 10 மணிக்கு இளவரசி ஆஜரானார். அப்போது அவரது மகன் விவேக் ஜெயராமன் உடனிருந்தார். ஏற்கனவே இளவரசியின் மகன் விவேக் ஜெயராமன், மகள் கிருஷ்ணப்பிரியா ஆகியோர் கமிஷன் முன்பு ஆஜரானது குறிப்பிடத்தக்கது.
அவரைத் தொடர்ந்து காலை 11.30-க்கு ஓபிஎஸும் ஆஜாராகினார். இதற்காக 11 மணிக்கே ஓபிஎஸ் விசாரணை நடைபெறும் எழிலகத்துக்கு வந்தார். முதல் முறையாக ஓபிஎஸ் ஆஜராகியிருப்பதால், பல்வேறு முக்கிய தகவல்கள் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. மே மாத இறுதிக்குள் விராசணை முடிவடைந்து 3 முதல் 4 மாதங்களுக்குள் ஆறுமுகசாமி ஆணையம் ஜெயலலிதா மரணம் தொடர்பான அறிக்கையை சமர்ப்பிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.