ரூ.30 ஆயிரம் லஞ்சம் கேட்ட உதவி மின் பொறியாளார் - கையும் களவுமாக பிடித்த லஞ்ச ஒழிப்புத் துறை..
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே இலவச மின் இணைப்பு வழங்க ரூ.30 ஆயிரம் லஞ்சம் கேட்ட உதவி மின் பொறியாளர் கைது செய்யப்பட்டுள்ளார்.
உசிலம்பட்டி அருகே உள்ள ரெட்டியபட்டி கிராமத்தை சேர்ந்தவர் சசிக்குமார். இவர் உத்தப்ப நாயக்கனூர் துணைமின் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் உள்ள தனது விவசாய தோட்டத்திற்கு மின் இணைப்பு பெறுவதற்காக கடந்த 2010-ம் ஆண்டு விருப்பமனு அளித்திருக்கிறார். 10 ஆண்டுகள் கழித்து அதவது 2021 ஆம் ஆண்டு இந்த மனுவிற்கு மின் இணைப்பு வழங்க அனுமதி கிடைத்திருக்கிறது. அதனைத் தொடர்ந்து இலவச மின் இணைப்பு வழங்கவும் தமிழக அரசு உத்தரவு பிறப்பித்திருக்கிறது.
அதன்பிறகு இலவச மின் இணைப்பு வழங்க வேண்டும் என உத்தப்பநாயக்கனூர் துணை மின் நிலைய உதவி மின் பொறியாளார் சக்திவேலிடம் சசிகுமார் கேட்டுள்ளார். தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்த சசிக்குமாரிடம் ரூ. 30 ஆயிரம் லஞ்சம் கொடுக்கும்படி உதவி மின் பொறியாளர் சக்திவேல் கேட்டிருக்கிறார். பின்னர் இது குறித்து லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாருக்கு சசிகுமார் தகவல் அளித்துள்ளார்.
லஞ்ச ஒழிப்புத்துறைதுறையினரின் அறிவுரைப்படி ரூ.30 ஆயிரம் ரொக்கத்தை உதவி பொறியாளர் சக்திவேலிடம் வழங்கியிருக்கிறார். அப்போது அங்கு மறைந்திருந்த மதுரை மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை துணை சூப்பிரண்டு சத்தியசீலன், இன்ஸ்பெக்டர் குமரகுரு தலைமையிலான காவல்துறையினர், சக்திவேலை கையும் களவுமாக பிடித்தனர். தொடர்ந்து சுமார் 4 மணி நேரத்திற்கும் மேலாக அவரிடம் விசாரணை நடத்திய லஞ்ச ஒழிப்பு போலீசார் , பின்னர் அவரை கைது செய்தனர்.