திமுக அரசு இந்து மக்களின் சொத்துக்களை கொள்ளையடிக்கிறது - ஹெச்.ராஜா பாய்ச்சல்

 
h

இந்து சமய அறநிலைத்துறைக்கு சொந்தமான இடங்கள் சூறையாடப்பட்டு வருகின்றன எனவும், இந்த அரசாங்கம் இந்து மக்களின் சொத்துக்களை கொள்ளையடிக்கிறது எனவும் பா.ஜ.க. முன்னாள் தேசிய செயலாளர் ஹெச்.ராஜா குற்றம்சாட்டியுள்ளார். 

புதுக்கோட்டை மாவட்டம் திருமயத்தில் உள்ள சத்தியமூர்த்தி பெருமாள் கோவிலில், வைகுண்ட ஏகாதசி சொர்க்கவாசல் திறப்பை முன்னிட்டு  பா.ஜ.க. முன்னாள் தேசிய செயலாளர் ஹெச்.ராஜா சாமி தரிசனம் செய்தார். இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது: தமிழகத்தில் இருக்கும் கோவில்களின் எண்ணிக்கையே தமிழக அரசாங்கத்திற்கு தெரியாது. நீதிமன்ற தீர்ப்பில் 44,000 கோவில்கள் இருப்பதாக கூறப்படுகிறது. ஆனால் இந்து சமய அறநிலையத்துறை கொள்கை விளக்க குறிப்பேட்டில் 36,000 கோவில்கள் இருப்பதாக கூறியிருக்கிறார்கள்.  இந்து சமய அறநிலைத்துறைக்கு சொந்தமான இடங்கள் சூறையாடப்பட்டு வருகின்றன. அறநிலையத்துறைக்கு சொந்தமான இடத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற அமைச்சர் சேகர்பாபு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இந்த அரசாங்கம் இந்து மக்களின் சொத்துக்களை கொள்ளையடிக்கிறது. இதை வன்மையாக கண்டிப்பதோடு, கோவில்கள் அனைத்தையும் இந்து மக்கள் மற்றும் அறங்காவலர்களிடம் ஒப்படைக்க வேண்டும். இலவசங்கள் வழங்குவதற்கு, அதனை வழங்காமல் இருக்கலாம். ஏதோ பணமாக மக்களின் வங்கி கணக்கில் செலுத்தினால் பயன்படுத்த ஏதுவாக இருக்கும். இவ்வாறு அவர் கூறினார்.