#BREAKING விடுதலையானார் பேரறிவாளன் - உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!!
ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சிறை தண்டனை அனுபவித்து வந்த பேரறிவாளனை விடுதலை செய்து தீர்ப்பு அளித்தது உச்சநீதிமன்றம்.
முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் பேரறிவாளன் உட்பட 7 பேர் கைது செய்யப்பட்டு கடந்த 31 ஆண்டுகளாக சிறை தண்டனை அனுபவித்து வருகின்றனர். ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தன்னை முன்கூட்டியே விடுதலை செய்ய வேண்டும் என்று கடந்த 2016ஆம் ஆண்டு உச்ச நீதிமன்றத்தில் பேரறிவாளன் மனு தாக்கல் செய்தார். தொடர்ந்து உடல்நலக்குறைவு காரணமாக 9 மாதங்களாக பரோலில் இருந்த அவருக்கு , உச்ச நீதிமன்றம் கடந்த மார்ச் மாதம் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது. அத்துடன் பேரறிவாளன் தன்னை முன்கூட்டியே விடுதலை செய்யவேண்டும் என்று தொடர்ந்த வழக்கை உச்சநீதிமன்ற நீதிபதிகள் எல். நாகேஸ்வரராவ், பி.ஆர்.கவாய் ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரணை செய்தது
மத்திய அரசு சார்பில் கடந்த சில தினங்களுக்கு முன்பு எழுத்துப்பூர்வ வாதம் தாக்கல் செய்யப்பட்டது. மத்திய அரசின் அதிகாரத்துக்கு உட்பட்ட சட்டப்பிரிவின் கீழ் தண்டனை விதிக்கப்பட்டவரை விடுவிப்பது, குடியரசுத் தலைவரே முடிவு செய்ய வேண்டும் என்று அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது. தண்டனையிலிருந்து விடுவிக்க குடியரசு தலைவருக்கு அதிகாரம் உள்ள விவகாரங்களில் மாநில அரசை பரிந்துரை செய்திருப்பது, அரசியல் சாசன விதிமுறைகளுக்கு எதிரானது என்றும் விளக்கம் அளிக்கப்பட்டது. ஆனால் இதற்கு தமிழக அரசு சார்பில் எழுத்துப்பூர்வ பதிலளிக்கப்பட்டது . 20 அம்சங்கள் கொண்ட இந்த பதிலை மூத்த வழக்கறிஞர் ராகேஷ் திவேதி தாக்கல் செய்தார் . அதில் இந்த விவகாரத்தில் முடிவெடுக்க மாநில அரசுக்கு முழு அதிகாரம் உள்ளது.
மத்திய அரசு சார்பில் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் நடராஜ் தாக்கல் செய்த விவாதங்கள் உச்சநீதிமன்ற அரசியல் சாசன மரபுகளின் தீர்ப்புகளுக்கு முரணாக இருப்பதாகவும் சுட்டிக்காட்டியது. அதன்படி பேரறிவாளன் விடுவிப்பது என்பது அரசியல் சாசன பிரிவு 161 என்பது தமிழக அரசு எடுத்த முடிவு, இது அரசியல் சாசனத்துக்கு குற்றவியல் சட்டப் பிரிவுக்கு உட்பட்ட எடுக்கப்பட்ட சரியான முடிவுதான் என தமிழக அரசு விளக்கம் அளித்தது.
இந்நிலையில் அனைத்து தரப்பு வாதங்களும் முடிவடைந்துள்ள நிலையில் பேரறிவாளன் விடுதலை தொடர்பான வழக்கில் நீதிபதிகள் இன்று தீர்ப்பளித்துள்ளனர். அதன்படி ராஜீவ் காந்தி கொலை வழக்கில் இருந்து பேரறிவாளனுக்கு விடுதலை வழங்கி உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. வழக்கில் இருந்து விடுவிக்க கோரி பேரறிவாளன் தாக்கல் செய்த மேல்முறையீடு மனு மீது நீதிபதி நாகேஸ்வர ராவ் தலைமையிலான அமர்வு அதிரடி தீர்ப்பு அளித்துள்ளது. அரசியல் அமைப்பு சட்டத்தின் 142வது அதிகாரத்தின் கீழ் விடுதலை செய்து உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. கிட்டத்தட்ட 30 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் இருந்த பேரறிவாளனை தனது அதிகாரத்தை பயன்படுத்தி உச்ச நீதிமன்றம் விடுவித்துள்ளது . பேரறிவாளனை விடுதலை செய்து வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பை உச்ச நீதிமன்ற அமர்வு வழங்கியுள்ளது. இந்த தீர்ப்பினால் பேரறிவாளனின் குடும்பத்தினர் ஆனந்த கண்ணீரில் இனிப்பு வழங்கி தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர்.