அதிமுக ஆட்சியில் லஞ்சம் பெற்று துணைவேந்தர் நியமனமா??.. கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும் - பாலகிருஷ்ணன் வலியுறுத்தல்..

 
balakrishnan

அதிமுக அரசில் லஞ்சம் பெற்றுக் கொண்டு துணைவேந்தர் உள்ளிட்ட பணி நியமனங்களை மேற்கொண்ட அனைவரும் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டுமென சிபிஎம் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.  

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழ்நாட்டின் முன்னாள் ஆளுநராக இருந்த,  இன்றைய பஞ்சாப் ஆளுநராக உள்ள திரு பன்வாரிலால் புரோஹித் அப்போதைய அதிமுக அரசு மீது பகிரங்கமானதொரு ஊழல் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். தமிழகத்தில் நான்கு ஆண்டுகள் கவர்னராக பணியாற்றிய காலத்தில் தனக்கிருந்த அனுபவம் மிகமிக மோசமானதாக இருந்ததாகவும், கல்வித் துறையில் பெருமளவிலான ஊழல் தலைவிரித்து ஆடியதாகவும் தெரிவித்ததோடு, தமிழ்நாட்டில் உள்ள பல்கலை கழகங்களின் துணைவேந்தர் நியமனங்களில் பெருமளவிலான முறைகேடுகள் நடைபெற்றதாகவும் குற்றம் சாட்டியுள்ளார். 40 கோடி 50 கோடி என பணம் பெற்றுக் கொண்டு பல்கலைக்கழக துணைவேந்தர் பதவிகள் அளிக்கப்பட்டதாகவும், அவர் பதவியில் இருந்த காலத்தில் 27 பல்கலைக்கழக துணைவேந்தர் நியமனங்கள் மேற்கொள்ளப்பட்டதாகவும் கடுமையான குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.

பஞ்சாப்  ஆளுநர் பன்வாரிலால் புரோகித்

அவரது குற்றச்சாட்டை வைத்து பார்க்கும் போது, பல்கலைக்கழக துணைவேந்தர் நியமனங்களில் மட்டும் சுமார் ஆயிரத்து ஐநூறு கோடி அளவிற்கு ஊழல் நடைபெற்றிருக்கலாம் என்பதோடு, துணைவேந்தர் நியமனங்கள் மட்டுமல்லாது ஆசிரியர் நியமனங்களிலும் பல்லாயிரம் கோடி அளவில் ஊழல் நடந்திருப்பதற்கான வாய்ப்புள்ளதாகவே தெரிகிறது. கல்வித்துறையில் இத்தகைய இமாலய ஊழல் நடைபெற்றிருக்கிறது எனில் அதைப் போலவே அனைத்துத் துறைகளிலும் மிகப் பெரும் ஊழல்களும், முறைகேடுகளும் கூட நடைபெற்றிருக்கும் என கருத வேண்டியுள்ளது.    தமிழ்நாட்டின் ஆளுநராக இருந்த ஒருவரே இத்தகைய குற்றச்சாட்டை முன்வைத்திருக்கும்  நிலையில் இத்தகைய ஊழல் குற்றச்சாட்டு மேலும் முக்கியத்துவம் பெறுகிறது.

அண்ணா பல்கலைக்கழகம்

எனவே, துணைவேந்தர் நியமனங்களில் முன்வைக்கப்பட்டுள்ள ஊழல் குற்றச்சாட்டுகள் குறித்து முழுமையான மற்றும் விரிவான விசாரணையை தமிழக அரசு உடனடியாக மேற்கொள்ள வேண்டுமென கேட்டுக் கொள்வதோடு, இத்தகைய முறைகேடுகள் நடைபெற்றிருப்பதை தற்போது பகிரங்கமாக தெரிவித்துள்ள பன்வாரிலால் புரோஹித் ஆளுநராக இருந்தபோது அதை ஏன் தடுக்காமல் அமைதி காத்தார் எனும் கேள்வியும் இயல்பாக எழுகிறது. எனவே, ஆளுநரும் முறைகேட்டிற்கு அப்பாற்பட்டவரல்ல என்றே கருத வேண்டியுள்ளது. அன்றைய அதிமுக அரசில் லஞ்சம் பெற்றுக் கொண்டு துணைவேந்தர் உள்ளிட்ட பணி நியமனங்களை மேற்கொண்ட அனைவரும் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும்” என மார்க்சிஸ்ட்  கம்யூனிஸ்ட் கட்சி தமிழக அரசை வலியுறுத்துவதாக குறிப்பிட்டுள்ளார்.