காதலிக்கு பிறந்தநாள் பரிசு : இளைஞர் எடுத்த விபரீத முடிவால் தவிக்கும் பெற்றோர்..

 
காதலிக்கு பிறந்தநாள் பரிசு கொடுப்பதற்கால  உயிரை மாய்த்துக்கொண்ட கல்லூரி மாணவன்

காதலிக்கு பிறந்தநாள் பரிசு கொடுப்பதற்காக கல்லூரி மாணவன் உயிரை மாய்த்துக்கொண்ட சம்பவம் சென்னையில் அரங்கேறியுள்ளது.  

சென்னை அண்ணாநகரை அடுத்த முகப்பேர் மேற்கு பகுதியைச் சேர்ந்த 19 வயது கல்லூரி மாணவன் மோகன்.  அங்குள்ள கல்லூரி ஒன்றில் முதலாம் ஆண்டு படித்து வந்த மோகன் கடந்த சனிக்கிழமை அன்று வீட்டில் இருந்த மின்சாரில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்த தகவலின் பெயரில் நொளம்பூர் போலீசார் மாணவரின் சடலத்தை கைப்பற்றி உடற்கூறு ஆய்விற்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.  மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.  இதனை அடுத்து வீட்டில் இருந்த மோகனின் செல்போனை கைப்பற்றி ஆய்வு செய்த போலீசார்,   அந்த செல்போனில் இருந்து கடைசியாக அவர் பேசிய நம்பருக்கு தொடர்பு கொண்டனர்.

கல்லூரி மாணவன்

அப்போது எதிர்முனையில் பெண் ஒருவர் பேசியுள்ளா. அவரை  அழைத்து விசாரித்த போது அவர் மோகனின்  காதலி என்பது தெரிய வந்தது.  மேலும் தற்கொலை முடிவெடுத்ததற்கான  உருக்கமான காரணமும் வெளியானது. கடந்த ஒன்றரை வருடங்களுக்கு முன்பு மெரினா கடற்கரையில் வைத்து,   மோகன் நண்பர்களுடன் கேக் வெட்டி தனது  பிறந்தநாள் கொண்டாடியுள்ளார்.  அப்போது கேக்கை  கடற்கரைக்கு வந்த சில மாணவிகளுக்கும் கொடுத்துள்ளார்.  அப்போதுதான் அவரிடம்  கேக் வாங்கி சாப்பிட்ட ஒரு பெண்ணுடன், மோகனுக்கு  பழக்கம் ஏற்பட்டுள்ளது. அடுத்த சில தினங்களேயே  இருவரும் மீண்டும் எதார்த்தமாக மெரினாவில் சந்தித்துள்ளனர். 

தற்கொலை

அதன் பின்னர் செல்போன் எண்ணை பரிமாறிக்கொண்ட இருவரும் செல்போன் மூலம் நட்பை வளர்த்துள்ளனர்.  ஒரு கட்டத்தில் இருவரும் ஒருவரை ஒருவர் காதலிக்க தொடங்கியுள்ளனர்.  ஒருவருக்கொருவர் பரிசுகளை பரிமாறிக் கொள்வதும், வெளியிடங்களுக்கு ஒன்றாக செல்வதும் என  காதலை வளர்த்துள்ளனர். இந்நிலையில் அண்மையில் மோகனுக்கும் அந்த பெண்ணுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதால்,  மோகனுடன் பேசுவதை அந்த பெண் நிறுத்தியுள்ளார். இந்த நிலையில் சனிக்கிழமை அந்த பெண்ணின் பிறந்த நாள் என்பதால் அவருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் சொல்வதற்காக மோகன் போன் செய்துள்ளார்.  அப்போது உனக்கு என்ன பரிசு வேண்டும் எனக் கேள் தருகிறேன் என்று மோகன் கேட்டுள்ளார்.  அப்போது  இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

இதனிடையே  உனக்காக உயிரையே தருவேன் என மோகன் கூறியிருக்கிறார். ஆனால் அந்தப்பெண் திட்டிவிட்டு செல்போன் இணைப்பை துண்டித்துள்ளார்.  இதனை அடுத்து காதலிக்கு பிறந்தநாள் பரிசு கொடுப்பதற்காக உயிரையே விட முடிவு செய்த மோகன், வீட்டிலிருந்து மின்விசிறியில் தூக்கிட்டு உயிரை மாய்த்துக் கொண்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.  காதலை நிரூபிக்க  உயிரை மாய்த்துக் கொண்ட மோகனின் விபரீத செயலால்,  அவரது பெற்றோர் ஆதரவின்றி நிர்கதியாக தவிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.