சொத்து தகராறு - முதல்வர் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் நபர் கைது!!
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வீட்டுக்குள் நள்ளிரவில் வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபர் போலீஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
சென்னை ஆழ்வார்பேட்டை சித்தரஞ்சன் சாலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இல்லம் அமைந்துள்ளது. இங்கு நேற்று வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளது. காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு தொடர்பு கொண்டு பேசிய மர்ம நபர் ஒருவர் சொத்து தகராறில் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என கூறி, முதலமைச்சர் வீட்டில் வெடிகுண்டு வைத்திருப்பதாக மிரட்டி இணைப்பை துண்டித்துள்ளார்.
இதையடுத்து வெடிகுண்டு நிபுணர்கள் மோப்ப நாயுடன் முதலமைச்சர் வீட்டில் சோதனை நடத்தியதில் வெடிகுண்டு எதுவும் கிடைக்காததால் மிரட்டல் வெறும் புரளி என்பது தெரியவந்தது. இதையடுத்து வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபர் யார்? என போலீசார் தீவிர விசாரணையில் இறங்கினர். இதில் தென்காசி மாவட்டம் ஆழ்வார்குறிச்சி பகுதியை சேர்ந்தவர் என்பது தெரியவந்தது. இவர் மது போதையில் வெடிகுண்டு மிரட்டல் விடுத்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து ஆழ்வார்குறிச்சி போலீசார் ஆரோக்கியராஜ் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதேபோல் கடந்த சில தினங்களுக்கு முன்பு நெல்லை மாவட்டம் சுத்தமல்லி சேர்ந்த தாமரைக் கண்ணன் என்பவர், கஞ்சா போதையில் முதலமைச்சர் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்தது குறிப்பிடத்தக்கது.