#Breaking : அக்.2ல் தமிழகம் முழுவதும் ஆர்எஸ்எஸ் ஊர்வலத்துக்கு அனுமதி மறுப்பு...
தமிழ்நாடு முழுவதும் அக்டோபர் 2ம் தேதி நடைபெற உள்ள ஆர்எஸ்எஸ் ஊர்வலத்திற்கு தமிழகம் முழுவதும் காவல்துறை அனுமதி மறுத்துள்ளது.
தமிழ்நாடு முழுவதும் அக்டோபர் 2ம் தேதி காந்தி ஜெயந்தி அன்று ஊர்வலம் நடத்து ஆர்எஸ்எஸ் அமைப்பு திட்டமிட்டு இருந்தது. அதாவது, ஆர்எஸ்எஸ் அமைப்பு சார்பில் அக்டோபர் 2ம் தேதி சென்னை, ஆவடி, சேலம், திருப்பூர், மதுரை, கோவை என மாநகர பகுதிகளில் மற்றும் தமிழகம் முழுவதும் பேரணி மற்றும் ஊர்வலம் நடத்துவதற்காக , அந்தந்த மாவட்ட கண்காணிப்பாளரிடம் அனுமதி கோரி விண்ணப்பிக்கப்பட்டிருந்தது. தற்போது ஆர்.எஸ்.எஸ் ஊர்வலத்திற்கு, அந்தந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள், மாநகர காவல் ஆணையர்கள் அனுமதி மறுத்துள்ளனர். அந்தந்த மாவட்டங்களில் நிலவும் சட்டம் ஒழுங்கு பிரச்சினை காரணமாக அனுமதி தர இயலாது என காவல்துறை தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக அனுமதி கோரி விண்ணப்பித்திருந்த ஆர்.எஸ்.எஸ் அமைப்புக்கு காவல்துறை எழுதியுள்ள கடிதத்தில், மத்திய அரசு பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா இயக்கத்தை தடை செய்துள்ளதால் , இஸ்லாமிய அமைப்புகள் போராட்டம் நடத்தி வருகின்றன. மற்றும் தொடர் வெடிகுண்டு வீச்சு சம்பவங்கள் தொடர்பாக மாநிலம் முழுவதும் ஓர் அசாதாரண சூழல் நிலவி வருகிறது. இந்த சூழலில் ஆர்எஸ்எஸ் அமைப்பு பேரனை நடத்தினால் அதில் அசம்பாவிதங்கள் ஏதும் நேர வாய்ப்பு இருப்பதாகவும் , ஆகையால் தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்பட வாய்ப்பு இருப்பதாலும், முன்னெச்சரிக்கை நடவடிக்கை காரணமாக பேரணிக்கு தடை விதிக்கப்படுவதாகவும் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து தமிழகம் முழுவதும் உள்ள 38 மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள் தங்கள் பகுதிகளில் ஊர்வலத்துக்கு அனுமதி கோரியிருந்த ஆர்எஸ்எஸ் அமைப்பினருக்கு அனுமதி மறுப்பு தெரிவித்து கடிதம் அனுப்பியுள்ளனர். அதேபோல் சென்னை, ஆவடி, தாம்பரம், சேலம், திருப்பூர், கோவை மற்றும் தென் மண்டல பகுதிகளான திருநெல்வேலி, மதுரை உள்ளிட்ட மொத்தம் 9 மாநகர காவல் எல்லைகளுக்கு உட்பட்ட பகுதிகளிலும் போலீசார் பேரணி நடத்த அனுமதி மறுத்து இருக்கின்றனர். இந்த பேரணி நடத்தினால் சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்படும், பொது அமைதி கெடும் எனவும், ஆகையால் அனுமதி வழங்க முடியாது என தெரிவித்திருக்கிறார்கள்.