முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசாவிற்கு எதிராக சிபிஐ குற்றப்பத்திரிகை தாக்கல்

 
a

வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசாவிற்கு எதிராக சிபிஐ, சென்னை சிறப்பு நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது.

முன்னாள் மத்திய அமைச்சரும், நீலகிரி தொகுதி எம்.பி.யுமான ராசா, கடந்த 1999 முதல் 2010ம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் வருமானத்துக்கு அதிகமாக 27 கோடியே 92 லட்சம் ரூபாய் அளவுக்கு சொத்து சேர்த்ததாக அவரது குடும்பத்தினர் உட்பட 16 பேர் மீது சிபிஐ வழக்குப்பதிவு செய்தது. அதாவது வருமானத்திற்கு அதிகமாக 575% சதவிகிதம் சொத்து சேர்க்கப்பட்டதாக இந்த புகாரில் கூறப்பட்டது. இது தொடர்பாக கடந்த 2015ம் ஆண்டு சிபிஐ வழக்குப்பதிவு செய்தது. இதைத் தொடர்ந்து, சென்னை, பெரம்பலூர், திருச்சி உள்ளிட்ட இடங்களில் சோதனை நடத்திய சிபிஐ, பல்வேறு ஆவணங்களை கைப்பற்றியது. அவற்றின் அடிப்படையில்தான் இந்த வழக்கில் விசாரணை நடந்து வந்தது.
 

இந்த நிலையில் தற்போது ஆ.ராசாவிற்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு உள்ளது. வருமானத்துக்கு அதிகமாக ரூ.5.53 கோடி அளவுக்கு சொத்துக்கள் சேர்த்ததாக ஆ.ராசா உள்பட 5 பேருக்கு எதிராக சிபிஐ, சென்னை சிறப்பு நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது. இந்த குற்றப்பத்திரிகையில், 2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு தொடர்பான ஆவணங்களும் சேர்க்கப்பட்டுள்ளதாக சிபிஐ வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளன.