மதுரையில் கூட்டநெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு இழப்பீடு - முதலமைச்சர் அறிவிப்பு

 
CM

மதுரையில் கள்ளழகர் ஆற்றில் இறங்கும் நிகழ்வின் போது கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த 2 பேரின் குடும்பத்திற்கு இரங்கல் தெரிவித்துள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இருவரது குடும்பத்திற்கும் தலா 5 லட்ச ரூபாய் நிவாரண நிதி அறிவித்துள்ளார். 

இது தொடர்பாக செய்தி மக்கள் தொடர்பு துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: மதுரையில் காலை கள்ளழகர் வைகையாற்றிலே இறங்கிய நிகழ்வைக் காணும் பொருட்டு, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து இலட்சக்கணக்கான மக்கள் கூடியிருந்தனர். கோவிட் பாதிப்பால் இரண்டு ஆண்டுகளுக்குப் பின், இந்த வைபவம் நடப்பதால், பக்தர்கள் கூட்டம் அதிக அளவில் காணப்பட்ட நிலையில், இன்று காலை அழகர் ஆற்றில் இறங்கும் நிகழ்ச்சியில் பங்குபெற்று திரும்பும் வேளையில் கூட்டநெரிசலில் சிக்கி ஒரு ஆண் மற்றும் ஒரு பெண் உயிரிழந்துள்ளனர். மேலும் ஒருவர் பலத்த காயங்களுடனும், 7 பேர் சாதாரண காயங்களுடனும் மதுரை இராஜாஜி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

madurai

இந்தத் துயர சம்பவத்தை அறிந்த தமிழ்நாடு முதலமைச்சர்  மு.க. ஸ்டாலின்  மிகவும் வேதனையுற்று, உயிரிழந்தோரின் குடும்பத்தாருக்கு தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொண்டதோடு இச்சம்பவத்தில் உயிரிழந்த இருவரின் குடும்பத்திற்கும் தலா ஐந்து இலட்சம் ரூபாய் நிவாரணமும், படுகாயமடைந்தவர்களுக்கு தலா 2 இலட்சம் ரூபாயும்,. சாதாரண காயமடைந்தவர்களுக்கு தலா 1 இலட்சம் ரூபாயும் முதலமைச்சரின் பொதுநிவாரண நிதியிலிருந்து உடனடியாக நிவாரணம் வழங்கிட ஆணையிட்டுள்ளார்கள் என குறிப்பிடப்பட்டுள்ளது.